41-50

41. பாலை
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
5
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
10
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்

42. முல்லை
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
5
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,
''ஏகுமின்'' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
10
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்

43. பாலை
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
5
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,
அஞ்சல் என்ற இறை கைவிட்டென,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
10
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயின் மன்னன் போல,
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்

44. குறிஞ்சி
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
5
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய
10
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே

இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்

45. நெய்தல்
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
5
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
10
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.

46. பாலை
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி
5
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
10
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

47. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
5
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, ''இது என'' யான் அது
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
10
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்

48. பாலை
அன்றை அனைய ஆகி, இன்றும், எம்
கண் உளபோலச் சுழலும்மாதோ-
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
5
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

49. நெய்தல்
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
5
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; ''ஏமார்ந்தனம்'' எனச்
சென்று நாம் அறியின், எவனோ-தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
10
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?

தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்

50. மருதம்
அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
5
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,
''கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று'' என,
''யாணது பசலை'' என்றனன்; அதன் எதிர்,
''நாண் இலை, எலுவ!'' என்று வந்திசினே-
செறுநரும் விழையும் செம்மலோன் என,
10
நறு நுதல் அரிவை! போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ