281-290

281. பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
5
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
10
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே.

வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்

282. குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
5
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்

283. நெய்தல்
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!-
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
5
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, ''வேறுபடாது ஆற்றினாய்'' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்

284. பாலை
''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'', நெஞ்சம்,
''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்:
5
''செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
10
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்

285. குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
5
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி-தோழி!-என்றும்,
10
அயலோர் அம்பலின் அகலான்,
பகலின் வரூஉம், எறி புனத்தானே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, ''அம்ப லும் அலரும் ஆயிற்று'' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

286. பாலை
''ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்'' என,
5
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின்-ஆயிழை!-நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ-தோழி!-அவர் சென்ற திறமே?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்

287. நெய்தல்
''விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்'' என்னும்
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப்
5
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
10
''தேர் மணித் தெள் இசைகொல்?'' என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்

288. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
5
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், ''இந்
10
நெடு வேள் அணங்கிற்று'' என்னும்கொல் அதுவே?

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்

289. முல்லை
அம்ம வாழி, தோழி!-காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
5
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.

பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
5
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.

பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்