(சொ - ள்.) நெஞ்சே முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி - நெஞ்சே ! காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியையுடைய இலவமரத்தின் விளங்கிய கிளைகள் நடுங்கும்படி வீசி; விளிபட வெவ் வளி வழங்கும் வேய்பயில் மருங்கில் - அவை முறியுமாறு கொடிய காற்று மோதியடிக்கின்ற மூங்கிற்புதர் நெருங்கிய இடங்களிலே; கடு நடை யானை கன்றொடு வருந்த நெடுநீர் அற்ற நிழல் இல் அருஞ்சுரம் கவலைய ஆங்கண் என்னாய் - கடிய செலவினையுடைய பிடிகள் தத்தங் கன்றுகளுடனே சேர வருந்தாநிற்ப நெடிய நெறி முழுதும் நீரில்லாதொழிந்த நிழல் அற்ற செல்லுதற்கரிய சுரத்தின்கணுள்ள கவர்த்த நெறிகளையுடைய அவ்விடமென் றெண்ணாயாய்; குட்டுவன் குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டுபடு வான் போது கமழும் அம் சில் ஓதி அரும் படர் உற - குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழையுடைய குவளையின் வண்டு மொய்க்கும் பெரிய மலரைச் சூடுதலானே மணங்கமழ்கின்ற அழகிய சிலவாய கூந்தலையுடைய நங் காதலி நீங்குதற்கரிய துன்பத்தாலே வருந்தவிட்டு; நெடுஞ் சேண் பட்டனை - நீதான் நெடுந்தூரம் வந்துற்றனை; வாழிய - இங்குப் போந்த பின்பு கருதி மீளலுறாநின்றனையாயின் நின் முயற்சி நனி நன்றாயிரா நின்றது, இத்தகைய முயற்சிகளோடு நீ நீடு வாழ்வாயாக !; எ - று.
(வி - ம்.) முளிதல்-காய்தல். வலத்தல்-சுற்றுதல். வழங்குங் கவலைய ஆங்கணெனக் கூட்டுக. கவலை ஆங்கணென்னாய் பட்டனை யென்றதனாலே மீளக் கருதா நின்றனையெனக் கொள்ளக்கிடந்த தறிக.
காதலி படருறுமாறு விட்டுச் சேட்பட்டனை யென்றது ஒன்றினேம் யாமென்றுரைத்தாரைத் தோள் நெகிழவிட்டதன் பயனாக நீ இக்கொடிய காட்டில்வந்து துன்புறா நின்றனை யென்றானென்பது.
இறைச்சிகள் :- (1) இலவத்தின் கிளை முறியுமாறு காற்றுவீசி மோதா நிற்குமென்றது, நீ கருதியவெல்லாம் கெடும்படியாக காமந் தலையெடா நின்றதென்றதாம்.