பக்கம் எண் :


215


அதிரல் வீ மோட்டு மணல் எக்கர் - அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; நௌவி நோன்குளம்பு அழுந்தென - மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்பு உறத்தெள் நீர்க் குமிழி இழிதரும் - வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தெளிந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீர் ததைஇ நின்றபொழுது - தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்தன்று - அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஐய நீங்கல் வாழியர்-ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக! எ - று.

     (வி - ம்.) புலம்பு - தனிமை: வருத்தமுமாம். நௌவி - மான். நோன்மை - வலிமை. ததைஇ - பெற்று. அதிரல் - புனமல்லிகை. ஒன்றுதல் - சேர்தலெனக் கொண்டு சேராத காலத்து அன்றிற்பறவை இறந்துபடுதல் போலெனவுமாம். இது தலைவி கூற்றைத் தோழி கூற்றாகக் கூறுதற்கு முன்பு கூறிய விதியை யிங்குக் கொள்க; மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். யானும் ஆற்றேனென்றது துன்பத்துப் புலம்பல்.

    முயங்கி யுறையாதவழிக் கூதிர்வாடையா லெய்து நோயினுமிறப்பது கொடிதன்றென்பாள் ஆற்றாதிறந்துபடுவே னென்றாள். மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவனைச் செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) அன்றில் ஒன்று இல் காலை புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கையை ஆற்றாதிறந்துபடுதல் போன்று யானும் ஆற்றாம லிறந்துபடுவேன் என்பது கருத்து. அதிரல்வீ என மாறுக. பொழுதாகிய அதுதானும் வந்தன்று என இயைத்துக் கொள்க.

(124.)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவுநீட்டிப்ப வாற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

     (து - ம்.) என்பது, தலைவன் வரையாது இரவுக்குறி வந்தொழுகுவதனை யறிந்த தலைவி வருந்துதலும் அதுகண்ட தோழி நீ வருந்தாதே கொள், அவர் இரவில் வருவதனை யஞ்சி யாம் வரைந்து கொள்ளுவீரென்று கூறினால் நீட்டியாமல் மணந்து, நம்மையு முடன்கொண்டு தமது நாடெய்துவரெனத் தெளியக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.