(து - ம்.) என்பது, தலைமகன் மணம்புரிந்து கொள்ளாது களவொழுக்கமேகொண்டு நெடுங்காலம் வந்து போவதனை ஆற்றாத தலைவி, தோழியை நோக்கித் துறைவன் தலையளி செய்யாமையால், யான் கொண்ட நோயானது ஊராரால் அறியப்பட்டு இன்னும் மிக்க நோயாய் இராநின்றதெனக் கூறி உள்ளுறையாலே தலைவன் தன்னை வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துமாறுங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
துறை : (2) தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்).
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கடலங் காக்கைச் செவ்வாய்ச் சேவல் |
| படிவ மகளிர் கொடிகொய்து அழித்த |
| பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் |
| கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு |
5 | இருஞ்சேற்று அயிரை தேரிய தெண்கழிப் |
| பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் |
| நல்கா மையின் நசைபழு தாகப் |
| பெருங்கை அற்றவென் சிறுமை அலர்வாய் |
| அம்பன் மூதூர் அலர்தந்து |
10 | நோயா கின்றது நோயினும் பெரிதே. |
(சொ - ள்.) கடல் காக்கைச் செவ்வாய்ச் சேவல் - கடலிலியங்கும் நீர்க்காக்கையிலே சிவந்த வாயையுடைய ஆண் காக்கையானது; படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெள் மணல் ஒருசிறை - நோன்பினையுடைய மாதர்கள் வைகுதல்வேண்டி ஆண்டுப் படர்ந்துள்ள கொடிகளைக் கொய்தலால் அழிபட்ட நெருங்கிய அவ்வடும்பின் கொடியையுடைய வெளிய மணற்பரப்பின் ஒருபால்; கடுஞ் சூல் வதிந்த காமர்பேடைக்கு - நிரம்பிய சூலுடனே தங்கிய தன்னால் விரும்பப்படுகிற