(து - ம்,) என்பது, தலைமைகொண்டொழுகும் பரத்தையொருத்தியைக் கலந்து பின்பு அவளைக் கைவிட்டு வேறொரு பரத்தைபாற் சென்ற தலைவனை அம் முதற்பரத்தை நெருங்குதலும் அவளது வெகுளி தணிக்கும்படி அவன் பாணனைவிடுப்ப அப் பாணனை நோக்கிப் பாணனே, நுந்தலைமகன் எமது சேரியில்வந்து காட்டி எந்நெஞ்சங் கொண்டமை விடாதுகண்டாய் ; எம் அன்னை சினமுடையள் இரங்காளாதலின் அவளாலொறுக்கப்படுவதுமுண்டு. அதனால் அவன் யாவராலும் நகைத்தற்குரியன் என இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனைப், "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) எனவரும் நூற்பாவின்கண் "இவற்றோடு பிறவும்" என்பதனால் அமைத்துக்கொள்க.
| நகைநன் குடையன் பாணநும் பெருமகன் |
| மிளைவலி் சிதையக் களிறுபல பரப்பி |
| அரண்பல கடந்த முரண்கொள் தானை |
| வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு |
5 | மன்னெயில் உடையோர் போல அஃதுயாம் |
| என்னலும் பரியலோ இலமெனத் தண்நடைக் |
| கலிமா கடைஇ வந்தெம் சேரித் |
| தாருங் கண்ணியுங் காட்டி ஒருமைய |
| நெஞ்சம் கொண்டமை விடுமோ வஞ்சக் |
10 | கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் |
| கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே. |