பக்கம் எண் :


412


     (முடிபு) தோழி, பிரிந்தோர் மாலையும் வாரார்; கண்டிசின்.

     (கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வரவும் வந்திலர்.

     (வி-ரை.) பழமழை யென்றது வரகு விதைத்த காலத்திற் பெய்த மழையை. புதுமை கதிரின் மேற்று. பாவை - மானால் உண்ணப்படும்இலையை உடைய வரகின்தாள்; இங்ஙனமே அறுகின் தண்டையும்கூறுதல் மரபென்று தெரிகிறது;

   
“பதவின் பாவை முனைஇ மதவுநடை 
   
 அண்ண லிரலை யமர்பிணை தழீஇ”, 
   
“பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகைத் 
   
 தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற 
   
 மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவை”    (அகநா. 23:7-8, 136:11-3.) 

இருவி - கதிர்கொய்த தட்டை (திருச்சிற். 144, பேர்.)

     ஒப்புமைப் பகுதி 1. பழநீர்: குறுந். 251:5. மழையாற் கலித்த வரகு: “வரகிணர் சிறப்ப, மாமலை புலம்பக் கார்கலித் தலைப்ப” (ஐங். 496:1-2.)

     1-2. வரகை இரலை மேய்தல்: “வானம் வாய்த்த வயங்குகதிர்வரகிற், றிரிமருப் பிரலையொடு மடமா னுகள” (முல்லைப். 98-9);“ஈரிலை வரகின், கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை, அரலை யங்காட் டிரலையொடு வதியும்” (நற். 121:2-4.)

     4. பசுவீ: குறுந். 62:1, 183:1.

     4-5. பிணியவிழ்ந்த பூ: குறுந். 366:4-5.

     3-5. முல்லையரும்பிற்கு வெருகின்பல்: (குறுந். 240:3); ‘‘பிள்ளைவெருகின் முள்ளெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா. 117:8-9); “வெருகு வேட்பச் சிரிப்பனபோன் முகைத்த முல்லை” (சீவக. 1651.)

     முல்லை கார்காலத்தில் மலர்தல்: குறுந். 126:3-5, ஒப்பு.

     7. கண்டிசின்: குறுந். 240:5, 359:1.

     கண்டிசிற் றோழி: குறுந். 112:5.

(220)
  
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)
  221.    
அவரோ வாரார் முல்லையும் பூத்தன 
    
பறியுடைக் கையர் மறியினத் தொழியப் 
    
பாலொடு வந்து கூழொடு பெயரும் 
    
யாடுடை யிடைமகன் சென்னிச் 
5
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே. 

என்பது பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக்கிழத்தி உரைத்தது.