தொடக்கம்   முகப்பு
கண்டோர்
381
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து,
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக்
குறுங் கால் மகன்றில் அன்ன
5
உடன் புணர் கொள்கைக் காதலோரே?
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1
 

 
382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள்,
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனை இழை மகளிர்ப் பயந்த
5
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2
 

 
386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே.
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6
 

 
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
 

 
390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மறுகி வினவுவோயே!
திண் தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே.
பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10
 

 
மேல்