தொடக்கம் முகப்பு
பாலை
 
301
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்,
அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும்
அவ் வரை இறக்குவை ஆயின்,
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1
 

 
302
அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே;
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே.
பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2
 

 
303
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே.
சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
 

 
304
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடுங்கூந்தல் புலம்பும்;
5
வய மான் தோன்றல்! வல்லாதீமே.
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4
 

 
305
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து,
சுடர்த் தொடிக் குறுமகள் இனைய,
எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே?
'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5
 

 
306
வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ் வரி வாட,
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.
பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6
 

 
307
ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே;
நன்று இல, கொண்க! நின் பொருளே
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7
 

 
308
பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8
 

 
309
வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும்
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ
5
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே?
'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9
 

 
310
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்,
இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவைஆயின்,
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே!
பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10
 

 
311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்;
'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே!
'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1
 

 
312
அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்
கோள் வல் என்னையை மறைத்த குன்றே.
உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2
 

 
313
தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்,
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
5
காடு இறந்தனள், நம் காதலோளே!
தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3
 

 
314
'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர,
கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ,
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும்
நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம்
5
தோள் இடை முனிநர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
315
பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண்
பூசல் கேளார் சேயர் என்ப
இழை நெகிழ் செல்லல் உறீஇ,
கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே.
சொல்லாது தலைமகன் பிரிந்துழி, தலைமகள் வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. 5
 

 
316
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த,
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட,
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
5
புலி வழங்கு அதர கானத்தானே.
தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6
 

 
317
சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங் காட்டு
அருஞ் சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே!
தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழி, தோழிக்குச் சொல்லியது. 7
 

 
318
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய,
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ,
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்,
5
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே.
'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8
 

 
319
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்?
மறந்தனரோதில் மறவா நம்மே?
தலைமகன் பிரிந்துழி, அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9
 

 
320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ,
முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து
உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அருஞ் சுரம் போயினர்
5
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.
தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10
 

 
321
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து,
மொழிபெயர் பல் மலை இறப்பினும்,
5
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1

 
322
நெடுங் கழை முளிய வேனில் நீடி,
கடுங் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்,
வெய்ய ஆயின, முன்னே; இனியே,
ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும்
5
தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே!
இடைச் சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம் நினைத்தலில் தனக்கு உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது. 2

 
323
வள் எயிற்றுச் செந்நாய் வயவு உறு பிணவிற்குக்
கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும்
வெஞ் சுரக் கவலை நீந்தி,
வந்த நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே.
இடைச் சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலைமகன், 'அவள் பண்பு வந்தன' என உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 3

 
324
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச்
சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர்,
வேங்கை வென்ற சுணங்கின்
5
தேம் பாய் கூந்தல் மாஅயோளே.
பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம் பாராட்டக் கண்ட தோழி, 'இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?' என வினாவினாட்கு அவன் சொல்லியது. 4

 
325
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ,
போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும்
வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது
எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே.
பிரிந்துவந்த தலைமகன், 'சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?' என்ற தோழிக்குச் சொல்லியது. 5

 
326
அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது,
மட மான் அம் பிணை மறியொடு திரங்க,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற, சுரமே;
5
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே!
இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6

 
327
பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சி,
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா;
வெயில் முளி சோலைய, வேய் உயர் சுரனே;
அன்ன ஆர் இடையானும்,
5
தண்மை செய்த, இத் தகையோள் பண்பே!
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து, இரங்கிச் சொல்லியது. 7

 
328
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த்
தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழியக்
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே.
'மழை வீழ்தலால் சுரம் தண்ணென்றது; இனி வருத்தம் இன்றிப் போகலாம்' என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது. 8

 
329
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு
மறுதருவதுகொல் தானே செறிதொடி
கழிந்து உகு நிலைய ஆக
5
ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே?
இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9

 
330
வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி,
வந்தனம்ஆயினும், ஒழிக இனிச் செலவே!
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும்,
5
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 10

 
331
அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க்
கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ
அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள,
இனிய கமழும் வெற்பின்
5
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1
 

 
332
அம்ம வாழி, தோழி! என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம்,
'கொடிதே காதலிப் பிரிதல்;
5
செல்லல், ஐய! என்னாதவ்வே.
பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2
 

 
333
அம்ம வாழி, தோழி! யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு,
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்;
5
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே?
புட்களை நொந்து சொல்லியது. 3
 

 
334
அம்ம வாழி, தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடை,
பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
5
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
335
அம்ம வாழி, தோழி! நம்வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப
5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே.
தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5
 

 
336
அம்ம வாழி, தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே.
பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவன் ஒழுகிய திறம் நினைந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 

 
337
அம்ம வாழி, தோழி! நம்வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7
 

 
338
அம்ம வாழி, தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவு அருங் காலையும், பிரிதல்
5
அரிது வல்லுநர் நம் காதலோரே.
தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8
 

 
339
அம்ம வாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே?
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 

 
340
அம்ம வாழி, தோழி! காதலர்
உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்?
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.
தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10
 

 
341
அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
342
அவரோ வாரார்; தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இருஞ் சினைக்
கருங் கால் நுணவம் கமழும் பொழுதே! 2
 

 
343
அவரோ வாரார்; தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3
 

 
344
அவரோ வாரார்; தான் வந்தன்றே
நறும் பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4
 

 
345
அவரோ வாரார்; தான் வந்தன்றே
புதுப் பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே! 5
 

 
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
 

 
347
அவரோ வாரார்; தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலியப்
பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே! 7
 

 
348
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8
 

 
349
அவரோ வாரார்; தான் வந்தன்றே
பொரி கால் மாஞ் சினை புதைய
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9
 

 
350
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப,
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே! 10
 

 
351
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி
பல் இதழ் உண்கண் மடந்தை! நின்
5
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1

 
352
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும்
வெஞ் சுரம் 'அரிய' என்னார்,
5
வந்தனர் தோழி! நம் காதலோரே!
இதுவும் அது. 2

 
353
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச்
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க, வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
இதுவும் அது. 3

 
354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே.
இதுவும் அது. 4

 
355
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி,
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
5
நெறி விலங்கு அதர கானத்தானே.
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5

 
356
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்,
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே.
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6

 
357
குரவம் மலர, மரவம் பூப்ப,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின்
அம் கலிழ் மாமை கவின
5
வந்தனர் தோழி! நம் காதலோரே.
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7

 
358
கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து,
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே?
தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8

 
359
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து,
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி யாம் வருதலின்
5
நணிய ஆயின சுரத்திடை ஆறே.
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9

 
360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும், எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி,
கடு மான் திண் தேர் கடைஇ,
5
நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே!
வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10

 
361
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
5
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1
 

 
362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப!
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
5
இருள் பொர நின்ற இரவினானே?
சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2
 

 
363
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக்
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே;
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.
புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3
 

 
364
முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்
சொல்லினென் இரக்கும்அளவை
வென் வேல் விடலை! விரையாதீமே!
உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4
 

 
365
கண மா தொலைச்சித் தன்னையர் தந்த
நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னல நயவரவு உடையை
5
என் நோற்றனையோ? மாவின் தளிரே!
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5
 

 
366
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை,
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம்,
அறிய ஆகுமோ மற்றே
5
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?
தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6
 

 
367
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
5
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே.
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7
 

 
368
எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும! நின்
5
அம் மெல்லோதி அழிவிலள் எனினே!
'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8
 

 
369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப; அலரே,
குரவ நீள் சினை உறையும்
5
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே!
பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9
 

 
370
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப,
நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ? எம் மறையாதீமே.
பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10
 

 
371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுக தில்ல
'அறநெறி இது' எனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1
 

 
372
என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர் எழ,
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2
 

 
373
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
வெஞ் சுரம் என் மகள் உய்த்த
5
அம்பு அமை வல் வில் விடலை தாயே!
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3
 

 
374
பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப,
முடி அகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே.
தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4
 

 
375
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
5
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங் கணோளே?
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5
 

 
376
நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க,
பூப் புரை உண்கண் மடவரல்
5
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே!
தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6
 

 
377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற, என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7
 

 
378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
துணை இலள் கலிழும் நெஞ்சின்
5
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8
 

 
379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை
இனக் களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9
 

 
380
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற, யானே;
5
கொடுத்தோர் மன்ற, அவள் ஆயத்தோரே.
தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது. 10
 

 
381
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து,
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக்
குறுங் கால் மகன்றில் அன்ன
5
உடன் புணர் கொள்கைக் காதலோரே?
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1
 

 
382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள்,
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனை இழை மகளிர்ப் பயந்த
5
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2
 

 
383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி,
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
5
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3
 

 
384
சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்!
நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர்,
'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின
ஆர் இடை இறந்தனள்' என்மின்
5
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.
உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4
 

 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 

 
386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே.
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6
 

 
387
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே!
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை
5
இன் துணை இனிது பாராட்ட,
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7
 

 
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
 

 
389
'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள்
மை அணல் காளையொடு பைய இயலி,
பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை
சென்றனள்! என்றிர், ஐய!
5
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே!
பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9
 

 
390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மறுகி வினவுவோயே!
திண் தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே.
பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10
 

 
391
மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை!
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ;
5
வெஞ்சின விறல் வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே.
உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன்  த்தது. 1
 

 
392
வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற
ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப்
பரியல் வாழி, தோழி! பரியின்,
எல்லை இல் இடும்பை தரூஉம்
5
நல் வரை நாடனொடு வந்தமாறே.
உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தங் கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. 2
 

 
393
துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய்,
அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி!
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட மகள்
5
வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே?
உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3
 

 
394
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற;
வெஞ் சுரம் இறந்த அம் சில் ஓதி,
பெரு மட மான் பிணை அலைத்த
5
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே.
உடன்போய்த் தலைமகள் வந்துழி, தாய் சுற்றத்தார்க்குச் சொல்லியது. 4
 

 
395
முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச்
சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல
ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து
5
கறங்கு இசை அருவி வீழும்,
பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே.
உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5
 

 
396
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை!
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
5
எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே.
இதுவும் அது. 6
 

 
397
'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரம் நனி வாராநின்றனள்' என்பது
முன்னுற விரைந்த நீர்  மின்
5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே.
உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7
 

 
398
'புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி,
மட மான் அறியாத் தட நீர் நிலைஇ,
சுரம் நனி இனிய ஆகுக!' என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
5
மிகப் பெரிது புலம்பின்று தோழி! நம் ஊரே.
தலைமகள் மீண்டு வந்துழி, அவட்குத் தோழி கூறியது. 8
 

 
399
'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்,
மை அற விளங்கிய கழல்அடி,
5
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?
உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9
 

 
400
மள்ளர் அன்ன மரவம் தழீஇ,
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்,
'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல்
5
வெஞ் சின விறல் வேல் காளையொடு
இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே.
உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10
 

 
மேல்