முகப்பு    

 நான்காம் பத்து 

பாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்
பாடப்பட்டோர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

31.மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து
   ஒருங்கே புகழ்தல்

குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து
நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென,
5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,
கண் பொரு திகிரி, கமழ் குரல் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர 
10
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,
துளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,
கருவி வானம் தண் தளி தலைஇய,   
15
வட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரையற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்;
20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே; வண்டு பட
ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒள் நுதல், பொன்னின்
25
இழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து,
30
அடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,
புறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;
நகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று, நின் தானை;
35
போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே.

துறை:செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:கமழ் குரல் துழாய்

32.மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி,
   அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்

மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ
மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்;
முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற,
மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று,
துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப,
5
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்;
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்;
எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந.
கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய,
10
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து,
தடந் தாள் நாரை படிந்து இரை கவரும்,
முடந்தை நெல்லின் கழை அமல், கழனி,
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து,
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த  
15
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே!

துறை:செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு

பெயர்:கழை அமல் கழனி  

33.வென்றிச் சிறப்பு

இறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்!
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள்,
கடி மரத்தான், களிறு அணைத்து;
நெடு நீர துறை கலங்க,
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு   
5
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்,
வாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து,
வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின்,
செவ் வாய் எஃகம் வளைஇய அகழின்,
கார் இடி உருமின் உரறு முரசின்,
10
கால் வழங்கு ஆர் எயில் கருதின்
போர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே.

துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வரம்பு இல் வெள்ளம்   

34.வென்றிச் சிறப்பு

ஒரூஉப நின்னை  ஒரு பெரு வேந்தே!
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடுங் கொடிய தேர் மிசையும்,
5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த ... ... ...
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
10
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த!  நீ ஓம்பல் மாறே.

துறை:
தும்பை அரவம்
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:ஒண் பொறிக் கழற் கால்  

35. வென்றிச் சிறப்பு  

புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே,
உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!
இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து,
அளகுடைச் சேவல் கிளை புகா ஆர,
5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை,
அந்தி மாலை விசும்பு கண்டன்ன
செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து,
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயினானே.
10

துறை:வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:அது
தூக்கு:செந்தூக்கு
பெயர்:மெய் ஆடு பறந்தலை
 

36.வென்றிச் சிறப்பு

வீயா யாணர் நின்வயினானே
தாவாதாகும், மலி பெறு வயவே;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று,
பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன்   
5
யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார்,
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவைப் பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய;
10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட;
குருதிச் செம் புனல் ஒழுக;
செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே!

துறை:களவழி
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வாள் மயங்கு கடுந் தார் 

37.மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன்
   செல்வத்தையும் வாழ்த்துதல்

வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை,
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!
பகைவர் ஆரப் பழங்கண் அருளி,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,
ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்!
5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப,
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்;
மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து,
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ,
தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக்
10
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்;
நன்று பெரிது உடையையால் நீயே,
வெந்திறல் வேந்தே!  இவ் உலகத்தோர்க்கே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வலம் படு வென்றி

38. கொடைச் சிறப்பு

உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின்,
5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே!  
10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை,
15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:
பரிசிலர் வெறுக்கை  

39.கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே,
எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்
துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை,
கறுத்த தெவ்வர் கடி முனை அலற,
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை   
5
உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு,
அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும்,
காலன் அனைய, கடுஞ் சின முன்ப!
வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
10
புன் புறப் புறவின் கண நிரை அலற,
அலந்தலை வேலத்து உலவைஅம் சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்,
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்  
15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே.

துறை:வாகை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வல் வியன் பணை  

40.கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல்  
5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம்
10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே:
20
செல்லாயோதில், சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,
25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின்,
30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் அவிர் சுடர் 


    மேல்