இரண்டாம் பத்து - பதிகம்

மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்   
5
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு, 
10
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
புண் உமிழ் குருதி, மரம் வீங்கு பல் புகழ், பூத்த
நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன்
பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு
பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம்
கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற்
பாகம் கொடுத்தான் அக் கோ.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டுயாண்டு
வீற்றிருந்தான்.

மூன்றாம் பத்து - பதிகம்

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,
கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து,

5
கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்இசை, உயர்ந்த கேள்வி,
நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த  
10
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த
காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு
கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண்
கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என,
'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என,
பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி
வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும்
பார்ப்பனியையும் காணாராயினார்.
இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன்
இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

 நான்காம் பத்து - பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின்  
5
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன் படு வாகை முழுமுதல் தடிந்து,
குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப,   
10
செருப் பல செய்து, செங்களம் வேட்டு,
துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
கமழ் குரல் துழாய், கழை அமல் கழனி, வரம்பு
இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை,
வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை,
ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின்
பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு
கொடுத்துத் தான் ஆள்வதில் பாகம் கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

ஐந்தாம் பத்து - பதிகம்

வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி,  
5
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பில் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ,    
10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 
15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து,  
20
கெடல்அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுள்
பரணர் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா
ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை
வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை,
செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:உம்பற் காட்டு வாரியையும், தன்மகன்
குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ.
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு
வீற்றிருந்தான்.

ஆறாம் பத்து - பதிகம்

 
குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு

 
கபிலையொரு குடநாட் டோரூ ரீத்து
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக்
குழவி கொள்வாரிற் குடிபுறந் தந்து

5
நாடல் சான்ற நயனுடைய நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு.
10
   

அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண் ணகழி, நில்லாத தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ; இவை பாட்டின் பதிகம்.

 

பாடிப் பெற்ற பரிசில்: ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பதுகாப்பொன்னும் நூறாயிரங் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக்கொண்டான் அக் கோ.

 

ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டுவீற்றிருந்தான்.

 

ஏழாம் பத்து - பதிகம்

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,
நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து,
5
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி,
10
மல்லல் உள்ளமொடு மாசு அற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி
ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ்
பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு
ஞாலம், பறைக் குரல் அருவி: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:சிறுபுறம் என நூறாயிரம் காணம்
கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற்
கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

எட்டாம் பத்து - பதிகம்

பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,

கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை,

பல் வேல் தானை அதிகமானோடு

இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று,

5

முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,

துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,

தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய

அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை

10

மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம்
திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா
சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர்,
நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள். இவை பாட்டின்
பதிகம்

பாடிப் பெற்ற பரிசில்:தானும் கோயிலாளும் புறம் போந்து
நின்று,'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம்
ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் கொடுப்ப, அவர், 'யான்
இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு
வீற்றிருந்தான்.


ஒன்பதாம் பத்து - பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,

5

பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,  

10

மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,     

15

மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.


அவைதாம்:நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல்,
கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை.
இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக்
கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம்
கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப்
படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு
ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட
வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு
வீற்றிருந்தான்.



    மேல்