பக்கம் எண் :

135

     6. பாண்டில் விளக்கு - கால்விளக்கு.

     7. நன்னுதல் விறலியரென்றது தமது 1ஆடல்பாடற்கேற்ப நூலுட்
சொல்லப்பட்ட அழகையுமுடையாரென்றவாறு.

     அவ்வழகினை நுதன்மேலிட்டுக் கூறியவாற்றான் இதற்கு, 'நன்னுதல்
விறலியர்'
என்று பெயராயிற்று.

     8. தொன்னகர் - 2அரசுடைய பழைய நகரிகள்.

     நெய் வழிபு உராலிற் (5) சுடரழல (6) ஆடும் (7) என்றதனாற்
சொல்லியது அந்த நகரிகளது செல்வமுடைமை.

     குட்டுவன் அட்டு ஆனான்; அடுதொறும் (1) பரிசிலர் களிறு பெற்று
ஆனார் (2); தொன்னகர் வரைப்புகளில் அவன் உரை ஆனா (8) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடையினையும் அக்கொடைக்கு
வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன்கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. 'அட்டானானே குட்டுவன்' என்றாற்போல்வன
கடைச்சங்கத்திற்காயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின
(தொல். செய். 80, ந.)

     1-2. குட்டுவன் பகைவரைக் கொன்று அச்செயல் போதுமென்று
அமையான்; இஃது, "ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும், அறக்கள வேள்வி
செய்யா தியாங்கணும், மறக்கள வேள்வி செய்வோ யாயினை" (சிலப். 28 : 130
- 32) என்பதனாலும் அறியப்படும். அங்ஙனம் அவன் அடுந்தோறும் பரிசிலர்
களிறுகளை ஓரளவில் அமையாது பெற்றனர்; 'துடியடிக் குழவிய பிடியிடை
மிடைந்த, வேழ முகவை நல்குமதி' (புறநா. 369 : 26 - 7)

     3-4. மலையின்மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல, மாடத்தில்
காற்றினிடத்தே விளங்குகின்ற கொடிகள் அசைகின்ற தெருவினையுடைய.

     5-6. சொரியப்பட்ட நெய்யையுடைய திரிக்குழாயானது தான் ஏற்றுக்
கொண்ட அந்நெய் மேலே வழிந்து பரவுதலால், காலையுடைய விளக்கினது
பருமையையுடைய சுடர் ஒளியை வீச; "சுடரும் பாண்டிற்றிருநாறு விளக்கத்து"
(பதிற். 52 : 13); "நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக்கொளீஇக், கையமை விளக்க
நந்துதொறு மாட்ட" (முல்லைப் 48 - 9)

     6. மு. நெடுநல். 175; "துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி உள்ளிழு
துறீஇய வொள்ளழற் பாண்டில்" (பெருங். 1.33 : 92 - 3)

     7-8. அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடுகின்ற பழைய
நகரங்களின் எல்லையில் சேரனைப் பற்றிய புகழ்ச்சியமைந்த வார்த்தைகள்
அமையா.

     மகளிர்க்கு நெற்றி சிறுத்திருத்தல் உத்தம இலக்கணமாதலின் அழகிய
நுதலென்றது சிறிய நுதலை; "நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி" (கலித்.
108 : 3)

     இப்பாட்டில், அமையாத செய்திகள் மூன்று சொல்லப்பட்டன. (7)


     1"ஆடலும் பாடலு மழகு மென்றிக் கூறிய மூன்றி னொன்று
குறைபடாமல்" (
சிலப்.3 : 8 - 9)

     2இவை பகையரசர் நகரங்கள்.