பக்கம் எண் :

149

தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
 30 எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூ றளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை
கைவ லிளையர் கையலை யழுங்க
 35 மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையா னெடுந்தகை செருவத் தானே.


     துறை - வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் - ஒழுகு
வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு - செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும். பெயர் - வடுவடு நுண்ணயிர் (8).

     (ப - ரை) 3. குடபுலமென்றது தன் நகரிக்கு மேல்பாலாம்.

     மாச்சினைச் சேக்கும் (5) பொழில் (9), வண்டு இறைகொண்ட (6)
பொழில் (9), அடைகரைப் (7) பொழில் (9) எனக் கூட்டுக.

     8. வடுவையடுதல் - வடுவை மாய்த்தல். ஊதை உஞற்றுதல் - அவ்வடு
மாயும்படி நுண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை; அயிர் -
நுண்மணல்.

     வடுவை மாய்க்கும் நுண்ணயிரெனற்பாலதனை வடுவடு நுண்ணயிரென்று
கூறிய சிறப்பானே இதற்கு, 'வடுவடு நுண்ணயிர்' என்று பெயராயிற்று.

     9. பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவுபெற்றென்றவாறு.

     10. இயலுதல் - உலாவுதல். ஒல்குதல் - அசைதல்.

     11. வெறியுறு நுடக்கம் - இயல்பாக நுடங்கலன்றித் தெய்வமேறிய
விகாரத்தால் நுடங்குதல். 13. அரவழங்குதல் - அரவாடுதல்.

     11-3. வெறியுறு நுடக்கம்போல அரவழங்குமெனக் கூட்டுக.

     அரவழங்கும் (13) பெருமலைப் (12) பெருந்தெய்வம் (13) என மாறிக்
கூட்டுக. 12. பெருமலை : இமயம்.

     குணகுடகடல் (15) எனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின்
கூறுகின்றமையான், வளைஞரலும் பனிப்பௌவம் (14) என்றது
தென்னெல்லையாம்.

     தெய்வத்து (13), பௌவத்து (14) என்னும் அத்துக்கள் ஈண்டுச் சாரியைப்
பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலையெனப்படும்.

     15. ஒடு: எண்ணொடு. ஆயிடையென்றது அவற்றின் நடுவென்றவாறு.

     பெருந்தெய்வம் (13) பனிப்பௌவம் (14) குணகடல் குடகடல் (15)
ஆகிய அவ்வெனக் கூட்டுக.

     1அவ்வென்னும் சுட்டுமுதல் வகாரவீற்றுப்பெயர் ஆயிடையென
முடிந்தது.


     1பதிற். 11: 24, உரை.