பக்கம் எண் :

202

     12-3. பகைவரது புறங்கூறுஞ் சொல்லைக்கேளாத, குற்றம் நீங்கிய
சிறந்த அறிவையும் உடைய; "நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர்
சென்ற நெறிய போலவும், காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும், ஏதின்
மாக்கள் பொதுமொழி கொள்ளாது" (புறநா.58:24-7)

      14. கட்புலனுக்கு தோன்றும் அமைதித் தன்மை மிக்குப் பெரிய
மடமென்னும் குணம் நிலைபெற்று; 'பெண்மையாவது கட்புலனாயதோர்
அமைதித்தன்மை' (தொல். கிளவி. 57, ந.). மடன் - செவிலியர் கொளுத்தக்
கொண்டு கொண்டது விடாமை' (தொல். களவு. 8, ந.)

     15-6. கற்பு என்னும் குணம் தங்குதல்கொண்ட, மணம் பரக்கின்ற ஒளி
விடுகின்ற நெற்றியையுடைய உயர்ந்தோளுடைய கணவ, ஏழரசர் முடியாற்
செய்த ஆரமாகிய ஆபரணம் விளங்குகின்ற மார்பையுடையோய்.

     வாய்மையையும் (12) ஒண்மையையும் உடைய (13) புரையோன் கணவ
என முடிக்க; புரையோள் கணவ: அனைத்தும் ஒரு பெயராய் நின்றது;
"செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை, மறுவில் கற்பின் வாணுதல் கணவன்"
(முருகு. 5 - 6, ந.)

     18. 'கேள்வியின்' என்றிப்பின் நன்று.

     17-8. அழியாத கோட்பாட்டையுடைய மந்திரி முதலிய சுற்றத்தார்
சூழவிருப்ப, வேள்விகளைச் செய்ததனால் தேவர்களை உண்பித்தாய். சுற்றஞ்
சுற்றல்: "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற
பயன்" (குறள், 524)

     18-9. வேதத்தை ஓதினமையால் உயர்ந்த நிலையையுடைய
தேவருலகத்திலுள்ள முனிவரை இன்புறச் செய்தாய். 20.மு. பதிற் 48:9.

     20-22. பெரியோரிடத்தே வணங்கிய மென்மையையும் பகைவர்க்கு
வணங்காத ஆண்மையையும் உடைய இளந்துணையாகிய புதல்வர்களைப்
பெற்றமையால் நின் குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி,
இல்லறத்தார்க்கு உரிய பழைய கடன்களைச் செய்து முடித்த, வெல்லும்
போரைச் செய்யும் தலைவனே. பேணி இறுத்தவென்க.

     ஒருவன் பிறக்கும் பொழுதே உண்டாகும் கடன்களாதலால்,
'தொல்கடன்' என்றார்.

     17-22. இவ்வடிகளில் இல்லறத்தாரால் இயல்பாக இறுக்கப்படும் தேவர்
கடன், முனிவர் கடன், தென்புலத்தார் கடன் என்னும் மூவகைக் கடன்களும்
கூறப்பட்டன (குறள். 7-ஆம் அதி. அவதாரிகை, பரிமேல்.)

     24. பறைக்குரலருவி புறநா. 126 : 8, 229 : 14; சிலப். .25 : 28)

     23-4. கற்பக முதலிய செல்வத்தையுடைய தேவர் வாழும் உலகமும்
கேட்கும்படி, இழுமென்னும் அனுகரண ஓசை உண்டாகும்படி கீழே
இறங்குகின்ற பறையோசையைப் போன்ற ஓசையையுடைய அருவிகள்.

     இழுமென இழிதரும் அருவி: முருகு. 316; "இழுமென்றது வந்தீங்கிழியு
மருவி" (சிலப். குன்றக்.)

     25-7. பெரியனவாகிய உச்சியையுடைய சிகரங்கள் தோறும் நிறைந்து
விளங்கும் அயிரையென்னும் உயர்ந்த மலையைப்போல, நீ வாழும் நாள்
அழிவில்லாததாகுக.

     மலைபோல வாழ்கவென்றல்: "நடுக்கின்றி நிலியரோ வத்தை
யடுக்கத்து................................பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே"
(புறநா. 2 : 20 - 24); "விளங்கொளி யிமய மென்னும், பொன்னெடுங் குன்றம்
போலப் பூமிமே னிலவி" (சீவக. 2417)