பக்கம் எண் :

62

     விரும்பாமலும் குற்றமற்ற அறிவினராய்ச் செவ்விய அறநெறியிலே
ஒழுகித் தம்முடைய, விரும்புகின்ற மனைவியரைப் பிரியாமல் இல்லறம் நடத்தி
விருந்தினருக்குப் பகுத்து எஞ்சியதை உண்டு. பிறரை நலிதலையும் வேற்றுப்
பொருளை வெஃகுதலையும் அரசர் தொழிலாகக் கூறுதல் சிறவாது; முன்னரே
தெறலும், அன்பு மிகவுடைமையும் கூறப்பட்டமை காண்க.

     9-10. மாக்கள் - குடிமக்கள். மூத்தயாக்கையும் பிணியுமில்லாமல்
அவற்றினின்றும் நீங்க.

     11. நெடுங்காலம் வாழும்படி செய்த வலியோர் வழியில் வந்தோய்.

     1-11. சினன் முதலியனவும் பிறவுமாகிய தீது, இகப்ப நன்று புரிந்து, உதவ
அறிவினராகி நலியாது வெஃகாது நடந்து பிரியாது உண்ண, மாக்கள் கழிய
உய்த்த உரவோரும்பல்.

     12-5. பசுக்களுக்காகத் தோண்டிய பத்தல்: நற். 2 : 5 - 6, 240 : 7 - 8;
ஐங். 304 : 1 - 2, அகநா. 155 : 9.

     12-6. இரும்பினாற் செய்த குந்தாலியால் திண்ணிய பாறையின் செறிவை
உடைத்தமையால் சிதறின போன்ற சிலவாக ஊறிய நீரைத் தன் இடத்தேபெற்ற
குழியில் பறியாகிய கயிற்றை வாங்கும் பாத்திரத்தைச் சுற்றி நீருண்ணும்
பொருட்டு மொய்க்கின்ற பசுக்கள் பொருந்திய கொங்கர் நாட்டைக்
கைக்கொண்ட, வேற்படையைப் பெற்ற சேனையையுடைய பகைவர்
அஞ்சுதற்குரிய தலைவனே.

     இரும்பையும் பொன்னென்றல் மரபு; ‘’பொன்னியற் புனை தோட்டியான்’’
(புறநா. 14 : 3) என்பதன் உரையைப் பார்க்க. பிணி - செறிவு; இங்கே
பாறையின் செறிவு. உடைத்து என்பதனை உடைக்க வென்று திரித்துப்
பொருள்கொள்க. சிரறு-சிதறிய; ‘சிரறு சேலாடிய நீர்வாய்ப் பதத்த
என்றாற்போல, சிரறுதல் சிதறுதன்மேல் நின்றது’ (கலித். 88; 13, ந.).
சிலவென்பதிற் சின்மை சிறிதென்பதைக் குறித்தது; சின்னீரென்னும் வழக்கைக்
காண்க (தொல். கிளவி. 17, சே.). பத்தல் - குழியின்கண். முகவை - முகக்கும்
பாத்திரம். ஆ கெழு கொங்கர்; ‘’கொங்கர், ஆபரந்தன்ன செலவு’’ (பதிற்.
77 : 10 - 11)

     17. உளையாற் பொலிந்த குதிரைகளோடு; மறவரொடு: ஒடு என்னும்
எண்ணிடைச் சொல்லை மா முதலியவற்றோடும் கூட்டுக. உளை-தலையாட்டம்.

     18. பட்டம்முதலிய ஆபரணங்களாற் பொலிந்த களிற்றோடு.

     19. வம்பு - தேர்ச்சீலை.

     20. போரை எதிர்நோக்கியிருந்த விருப்பத்தையுடைய வீரர்களோடு
மாமுதலியன முற்கூறினமையின் மறவரென்பது காலாட்படையை.

     17-20. நால்வகைப்படை: புறநா. 55 : 7 - 8.

     21. துஞ்சுமரம்-கணையமரம்; பதிற். 16 : 3, உரை பார்க்க. துவன்றிய
வாயில். மலரகன் பறந்தலை - மலர்ந்த அகன்ற வெளியையுடைய.

     22. வாயிலின்கண்ணே நாலும்படிகட்டிய; இது பின்வரும் ஐயவிக்கு
அடை.

     23. வில்லின் விசையோடு பொருந்திய மேலான சிறப்பையுடைய
அம்புக் கட்டுகளையும்; வில்விசை - விற்பொறியுமாம் (சிலப். 15 : 207);
ஐயவி - துலாமுமாம். 21 - 3. பதிற். 16:2 - 4.