பக்கம் எண் :

86

     19. அணை இடுகின்ற ஆராவாரத்தோடு விருப்பம் கொண்ட
மக்கட்டொகுதி.

     20. முழவு ஒலிக்கின்ற பழைய ஊரில் நிகழும் விழாவைக் கண்டு தம்
இடத்திற்குத் திரும்பிச் செல்லுகின்ற. மூதூர் விழவு: பதிற். 15 : 18, 29 : 7.

     15-20. மணற்கோட்டை நீங்குதலால் மேலும் ஆரவாரஞ்செய்து அணை
கோலிய மக்கள் பின்னர் மூதூருக்குச் சென்று விழாவைக் கண்டு பெயர்ந்தனர்.
மூதூர் என்றது இராசதானிநகரம் போலும்.

     21. வளத்தையுடைய பல ஊர்களையுடைய மருதநிலத்தின் பகுதி
யிலுள்ள மக்களும்.

     22-5. குறிஞ்சி நிலத்தியல்பு கூறப்படும்.

     22-3. தினைக் கொல்லையை உழுவோர் வரகின்மேலே இட்ட நறுமணம்
மிக்க காட்டுமல்லிகையையுடைய வன்மை பொருந்திய இருப்பிடங்களில். வரகு
மீதிட்ட-வரகின் வைக்கோலை மேலே வேய்ந்த எனலுமாம்.

     24. மெல்லிய தினைமாவை முறைப்படியே விருந்தினர்க்குப் பகுத்து
அளித்துண்ணும். மென்திணை நுவணை: மலைபடு. 445 ; ஐங் .285 : 2.

     25. புல்லிய நிலங்களைத் தழுவிய காட்டை அணிந்த இடங்களில்
உள்ளோரும்.

     26-9. முல்லைநிலத்தின் இயல்பு கூறப்படும்.

     26. பலபூக்களின் வாடலையுடைய காடு தான் அளிக்கும் பயன்கள்
வேறுபட்டு. 27. செவ்வரக்கைப்போன்ற நுண்ணிய மணலையுடைய
குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு.

     26-7. "அரக்கத் தன்ன செந்நிரப் பெருவழிக், காயாஞ் செம்மறாஅய்"
(அகநா. 14 : 1 - 2) 28. கழலொடு மறுகும் - கழற்சிக்காயோடு திரியும்.

     29. வானத்திலே உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய காடுகளை
யுடைய முல்லை நிலத்திலுள்ளாரும். கடறு - காடு.

     28-9. காலென்பதற்குச் செருப்பென்று பொருள்கூறி இவ்வடிகளை
மேற்கோள் காட்டினர் (சீவக, 1648, ந.)

     30. முரசைப் பெற்ற முடியுடை மன்னரும் குறுநிலமன்னரும் வஞ்சினங்
கூறி. வேந்தரும் வேளிரும் : பதிற். 88 : 13.

     31. கடலிலுள்ளனவும் காட்டிலுள்ளனவுமாகிய அரண்களால் நன்மை
பெறாராய் நடுங்கும்படி.

     32. போரை மிகுவிக்கின்ற கடிய (முரசினது) முழக்கம் வானத்தை
அடைந்து அதிரும்படி.

     33. கடுஞ்சினங் கடாஅய்-மிக்க சினத்தைச் செலுத்தி. முழங்கும்
மந்திரத்து - உரக்க உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களால்.

     34. கடவுள் பேணியர்-முரசில் உறையுங் கடவுளை வழிபடும் பொருட்டு.

     35. உயர்ந்தோன் - முரசுறை கடவுளை வழிபடுவோன்.

     36. கொடிய கண்ணையுடைய பேய்மகள் கையை அடித்து நடுங்க.
அப்பலியைக் கொள்ளமாட்டாமையின் நடுங்கியது. கருங்கட் பேய் மகள் :
பதிற். 22 : 37.