பக்கம் எண் :

90

 20 எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள்
வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்ட னனையைம னீயே வண்டுபட
ஒலிந்த கூந்த லறஞ்சால் கற்பிற்
 25 குழைக்குவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின்
இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனையணின் றொன்னகர்ச் செல்வி
நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு
 30 வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்
தடங்கிய புடையற் பொலங்கழ னோன்றாள்
ஒடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப்
புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச்
 35 சூர்நிகழ்ந் தற்றுநின் றானை
போர்மிகு குருசினீ மாண்டனை பலவே

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - கமழ்குரற் றுழாய்
(8)

     (ப - ரை) ஒலிப்பப் (4) பரவி (9) என்ன முடிக்க.

     5-6. மணியெறிதலை உண்ணாப்பைஞ்ஞிலத்தின் தொழிலாக்கி அவர்கள்
மணியை எறிந்து தீர்த்தமாடுகின்றார்களாகக் கொள்க.

     6. உண்ணாப் பைஞ்ஞிலமென்றது அத்திருமால் கோயிலுள்
வரம்வேண்டி உண்ணாது கிடந்த மக்கட்டொகுதி யென்றவாறு.

     இனி எறியுநரென்பதனைத் தொழிற்பெயராக்கி, மணியையெறிவார்
1தீர்த்தமாடுவேர் ஆடுதற்கு இது 2முகுத்தமென்று அறிந்து வருதற் பொருட்டு
அம்மணியை எறிந்து ஆரவாரிப்பவென்றுரைப்பாரும் உளர்.

     8. கமழ்குரற்றுழாயென்றது நாறுகின்ற பூங்கொத்துக்களையுடைய
துழாயென்றவாறு. 3நாறாத பூவுடையதனை மிக நாறுவதொன்றுபோலச்
4சாதிபற்றிச் சொன்ன சொற்சிறப்பான் இதற்கு, 'கமழ்குரற் றுழாய்'
என்று பெயராயிற்று.


     1இப்பொருளே சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.

     2முகுத்தம் - முகூர்த்தமென்பதன் சிதைவு.

     3"நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை" (பரி.. 4 : 58) எனத்
துழாய் பூங்கொத்து மணமுடையதென்று கூறுவதனால் இவ்வுரை
சிறப்புடையதாகத் தோற்றவில்லை.

     4சாதியென்றது பூவென்னும் சாதியை.