பக்கம் எண் :

99

34. ஒரூஉப நின்னை யொருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலந் தோயம் விரிநூ லறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்து
 5 நெடுங்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற்
பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும்
மன்னிலத் தமைந்த............................................
மாறா மைந்தர் மாறுநிலை தேய
 10 முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ
அரைசுபடக் கடக்கு மாற்றற்
புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே.

     துறை - தும்பையரவம். வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
ஒண்பொறிக் கழற்கால் (2)

     (ப - ரை) ஒரூஉப (1) அறுவையர் (3) என முடிக்க.

     2. ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய போர்த்
தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென்றவாறு.

     இச்சிறப்பான் இதற்கு, 'ஒண்பொறிக் கழற்கால் என்று பெயராயிற்று.

     வேந்தே (1) மாவூர்ந்து (4) அரைசுபடக் கடக்கும் ஆற்றலையுடைய (11)
புரைசான் மைந்த, அவ்வாற்றலிடத்து வரும் 1குறைகளுக்குப் பிறரை ஏவாது
அவற்றை நீயே பாதுகாத்துச் செய்தலால் (12) ஒரூஉப (1) அறுவையார் (3)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     2மாற்றார் நாடுகோடல் முதலாயினவன்றி 3வென்றிகோடலே
கூறினமையால் துறை தும்பையாய், ஒரூஉபவெனப் படையெழுச்சி
மாத்திரமே கூறினமையான், அதனுள் 4அரவமாயிற்று.

     'செவ்வுளைய' (4) என்பது முதலாக இரண்டும் வஞ்சியடியாய்
வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.


     1குறைகள் - காரியங்கள்.

     2மாற்றார் நாடு கோடல் காரணமாயின் வஞ்சியாய் விடும்; "எஞ்சா
மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித்தன்றே"
(
தொல். புறத். 7)

     3"அரசுபடக் கடக்கு மாற்றல்" என்று மாத்திரம் கூறினமைபற்றி 'வென்றி
கோடலே கூறினமையால்' என்றார்; அது தும்பையாதல், "மைந்துபொருளாக
வந்த வேந்தனைச், சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற்றென்ப" (
தொல். புறத். 15)
என்பதனால் உணரப்படும்.

     4தும்பையரவம் - பு. வெ. 128.