வாயின்” என்றார். மண்ணா வாயினும் என்னும் உம்மை தொக்கது. மண்ணுதல் ஒப்பனை செய்தல். கார்மல ரென்றார், முல்லை கார்காலத்து மலரும் இயல்பிற்றாதலால், மண்ணிய கூந்தல் அகிலும் ஆரமும் முதலிய பல விரைப்பொருளின் மணம் கொண்டு கமழு மாயினும், தேவியின் கூந்தல் சிறப்புடைய முல்லையணிந்து அதன் நறுமணமே சிறக்கு மென்பது தோன்ற, “கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்றார்; “கமழகில் ஆர நாறு மறல் போற் கூந்தல்” (குறுந். 286) என்பது காண்க. மண்ணாக்கால் நறுமணமும் மண்ணியக்கால் முல்லை மணமும் என்றது, தேவியின் கற்புச் சிறப்புணர்த்தி நின்றது. பொய்கையி லென்பது அவாய் நிலை; எனவே, இது தாமரையாயிற்று. பொய்கையில் இரவுப்போதிலும் கூம்புதலின்றி விரிந்து திகழ்வதொரு தாமரைப்பூ வுளதேல் அது நிகர்க்கும் கண்ணென்றதனால், இஃது இல்பொரு ளுவமை. இனிப் பழையவுரைகாரரும், “ஒரீஇயனபோல வென்பதற்குப் பொய்கை யென வருவித்துப் பொய்கையை யொருவினபோல என வுரைக்க; இனி மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயின போல வென்பாருமுளர். இரவு மலர் நின்றென்பது, பொய்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற்றென்றவா” றென்பர். பொய்கையில் நீங்கியன போல முகத்தே அலமரும் என்றது, பொய்கைக்கண்ணே நாளத்தின் நீங்கி நீர்மேல் அலமரும் பூப்போல முகத்திடத்தே கண் அலமரும் என்க. பெருமை, கண்ணிற் கிலக்கணமாகலின், “பெருமதர் மழைக்கண்” என்று சிறப்பித்தார். நீரழுவம், ஆழ்ந்த நீருள்ள யாறு. காந்தள் இலங்கும் யாறு எனவே, யாற்றின் இரு கரையும் எய்தும்; அவ்விடத்தே நின்ற வேய் என்றது, அதன் குளிர்ச்சியைச் சிறப்பித்தவாறு. “நீரழுவத்துவே யென்றது, ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தேயிருக்கும் தோள் என்றற்கென்க” என்பர் பழையவுரைகாரர். காந்தளை யுடன் கூறியது, தோளிற்க வேய்போலக் கைக்குக் காந்தள் உவம நலஞ் சிறந்த தென்றற்கு. வாழ்க்கைத் துணையாதலால், அரசற்கு வாழ்வு வேண்டி வாழ்த்தலுற்ற ஆசிரியர். “இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே” என்றார். பல வென்பதை ஆயிரத்தோடு மாறிக் கூட்டுக. வெள்ளம், ஒரு பேரெண். விளங்கிய கொள்கையும் வாய்மொழியுமுடைய கடவுளரைப் பேணற் கெடுத்த ஆவுதிப் புகையும், பாசவர் விருந்து கண்மாறா துண்பித்தற் கெடுத்த அடு நெய் யாவுதிப் புகையுமாகிய இரண்டுடன் கமழும் நாற்றத்தால், வானத்துக் கடவுளரும் விழைதக, வளம் பழுனிய சிறப்பினையும் கள்ளினையும் யானையினையுமுடைய, நன்கலம் பேணித் தரூஉம் மண்படு மார்பினையு முடையோய், கோவலர் பல்லாக்களை வியன்புலம் பரப்பிக் கடத்திடை யுயர்மணி பெறூஉம் செருப்புமலை நிற்கும் பூழி நாட்டவர் கோவே, மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருந, மழை பிழைப் பறியாது பயம் சுரந்து, மாந்தர்க்கு நோயி லூழியாக, கூந்தலையும் மழைக்கண்ணையும் பணைத்தோளையுமுடைய இவளோடு கூடிப் பல ஆயிர வெள்ளம் வாழ்வாயாக வென வாழ்த்தியவாறாம். இனிப் பழையவுரைகாரர், “பூழியர்கோவே, மழவா மெய்ம்மறை, அயிரைப் பொருந, பய பழை சுரந்து, மாந்தர்க்கு நோயில் ஊழி யுண்டாக, இவளோட பல ஆயிர வெள்ளம் வாழிய ரெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். |