வுரைகாரர். இதனைக் கழுக்கோ லென்றும் கூறுப. யானையும் தேரும் வருத்தமின்றிச் செல்லுமாறு அகற்சியும் உயர்ச்சியுமுடைய வாயி லென்றற்கு “ஓங்கு நிலை வாயில்” என்றார். ஐயவித்துலாம், மதிலிடத்தே நிறுத்தப்படும் ஒருவகைப் போர்ப்பொறி. இதனை வாயிலிடத்தே தூங்குமாறு கட்டி, கதவை முருக்கிப் புகும் களிறுகளை இதனால் தாக்குவரென்பது தோன்ற, “ வாயில் தூங்குபு தகைத்த ஐயவி” யென்றார். மேலும், இதனைப் பகைவர்மேல் விசையம்பு செலுத்தும் விற்பொறியோடு பொருந்த வைத்திருப்ப ரென்றற்கு, “வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி” யென்று கூறினார். இனிப் பழையவுரைகாரர், “தூங்குபு வென்பதனைத் தூங்க வெனத் திரித்துக் காலவழுவமைதி யெனக் கொள்க” வென்றும். “தகைத்தல், கட்டுத”லென்றும் கூறுவர். விசைவில் லென மாறி யியைக்க. தானே வளைந்து அம்புகளைச் சொரியும் விசையையுடைய வில். விசை வில்லாகிய பொறியென வுணர்க இனி, “வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவி” யென்பதற்கு விசையையுடைய வில்லாற் செலுத்தப்படும் வலிய அம்புகளாலும் வீழ்க்க மாட்டாமையால், விசைவலி யழிந்து வில் கெடுமாறு பண்ணிய விழுச்சீர் ஐயவித் துலாம் என்றுரைப்பினு மமையும். விசையுடைய வில்லாலும் துளை யுருவ எய்ய முடியாத மிக்க கனத்தையுடைய “ஐயவித் துலாம்” என்பர் பழையவுரைகாரர். அவ்வாறு கொள்ளுமிடத்து மாட்டிய வென்பதற்கு மாள்வித்த வென்பது பொருளாகக் கொள்க. மிளை, காடு, கரந்திருந்து தாக்கும் மறவரும் பல்வகைப் பொறிகளும் உடைய காடாதலின், “கடிமிளை” என்றும், இடங்கரும் கராமும் முதலையும் சுறவும் பிறவும் இனிது வாழ்தற்கேற்ற ஆழமுடைமைபற்றிக் “குண்டுகிடங்” கென்றும் விதந்தோதினார். கவணும் கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் சென்றெறி சிரலும் நூற்றுவரைக் கொல்லியும், தள்ளி வெட்டியும், அரிநூலும், பிறவும் கொண்டு, ஏனை வீரரால் காவல் வேண்டப்படாத நொச்சி மதில் “நிரைப்பதணம்” எனப்பட்டது. அகப்பா வென்பது சீரிய அரணமைந்ததோ ரிடமாகும் இஃது உம்பற்காட்டைச் சேர்ந்தது. குட்டுவன் உம்பற் காட்டை வென்று கொண்ட காலத்து இங்கேயிருந்து, தன்னை யெதிர்த்த பகைவரை வென்று இதனைத் தனக்குரித்தாகக்கொண்டான். இதுபற்றியே “அண்ணலம் பெருங்கோட்டகப்பா வெறிந்த குட்டுவ” என்றார். இவனது இச் செயலையே, “மிகப்பெருந் தானையொடு இருஞ்செருவோட்டி, அகப்பா வெறிந்த அருந் திறல்” (சிலப். 28, 143 -4) என இளங்கோவடிகளும் கூறினர் ஐயவித் துலாம் முதலிய பொறிகளாலும் மிளை, கிடங்கு, மதில், பதணம் முதலியவற்றாலும் தலைமையமைத்தது பற்றி, “அண்ணல்” என்றும் புறத்தோரால் எளிதில் தோண்டப்படாத அடியகலமும், ஏணிக் கெட்டாத உயரமும், பற்றற்காகாக் காவற்பெருமையும் உடைமைபற்றிப் “பெருங்கோட் டகப்பா” வென்றும் சிறப்பித்தார். இவை அகப்பாவின் அருமை தோன்ற நின்றனவாயினும் குட்டுவனுடைய போர்நலமும் வன்மையும் விளக்குதல் காண்க. பெருங்கோட்டகப்பா வென்பதனால், இதனை மலைமேலரணாகக் கொள்ளற்கும் இடமுண்டு. குட்டுவற் குரித்தாகிய இவ் வகப்பா பிற்காலத்தே செம்பியனொருவனால் இவனிடமிருந்து வென்று கொள்ளப்பட்டதாக மாமூலனார், |