| துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ததைந்தகாஞ்சி. 4 - 10. அலந்தலை.............குட்டுவ. உரை : அலந்தலை உன்னத்து அங்கவடு பொருந்தி - இலையில்லாமல் உலர்ந்த தலையினையுடைய உன்ன மரத்தின் சிறு சிறு கிளைகளைப் பொருந்தி யிருந்து; சிதடி கரைய - சிள்வீ டென்றும் வண்டுகள் ஒலிக்க; பெரு வறம் கூர்ந்து - பெரிய வற்கடம் மிகுதலால் நிலம் பசுமையற்ற; புலம் கெடு காலையும் - வயல்கள் உலர்ந்து கெட்டகாலத்தும்; கலம் வாங்குபு தகைத்த பையர் - இசைக் கருவிகளைத் தொகுத்துக் கட்டிய பையினை யுடையராய்; மன்றம் போந்து - ஊர் மன்றத்தை யடைந்து; ஆங்கண் மறுகு சிறை பாடும் வயிரிய மாக்கள் - அவ்விடத்தே தம் இசைக் கருவிகளைச் செம்மையுறப் பண்ணி ஊரிடத்து மறுகுகளின் சிறைக்கண்ணே நின்று பாடும் கூத்தரும் பாணருமாகிய பரிசிலர்கள்; கடும் பசி நீங்க உண்டு மலிந்து - தமது மிக்க பசி நீங்குமாறு உண்பனவுண் டமைந்து; பொன் செய்புனை யிழை யொலிப்ப - பரிசிலாகப் பெற்ற பொன்னாற் செய்யப்பட்ட அழகிய இழைகள் ஒலிக்குமாறு; நெஞ்சு மலி உவகையர் பெரிது உவந்து ஆட - நெஞ்சு நிறைந்த உவகையினை யுடையராய் மிகவும் மகிழ்ந்து கூத்தாட; சிறு மகிழானும் - தான் நறவு சிறிதே யுண்டு அதனாற் பிறந்த சிறு மகிழ்ச்சியெய்திய போதும்; பெருங் கலம் வீசும் - பெரு விலையினையுடைய அணிகலன்களை வழங்கும்; போரடுதானைப் பொலந்தார்க் குட்டுவ - போரிலே வெல்லுகின்ற தானையினையும் பொன்னாற் செய்த மாலையினையுமுடைய குட்டுவனே எ - று. தழங்கு குரல், தழங் குரல் என வருதல் போல, அலந்த தலை அலந்தலை யென வந்தது; “அலந்தலை யிரத்தி” (புறம். 325) என்றும் “அலந்தலை வேலம்” (பதிற். 39) என இந் நூலுள்ளும் வருதல் காண்க. பழையவுரைகாரரும், “அலந்தலை யெனல் விகாரம்” என்பர். பல்லாறாகக் கிளையும் கவடும் கொண்டு, கணுக்கடோறும் பொருக்கும் குழியும் பெற்றுப் பல்வகைப் பூச்சிகள் பொருந்தி யிருத்தற்கேற்ற அமைதியுடையதாதலால், “உன்னத்து அங்கவடு பொருந்திச் சிதடி” கரைவதாயிற் றென்க. சிள் வீடு |