கறங்கும் ஓசை வண்டிசைபோல் இன்பந் தருவதன்மையின், “சிதடி கரைய” என்றார். சிதடி - சிள்வீ டென்னும் வண்டு. பெருவற மெனவே சிற்றுயிரும் உணவு பெறாது வருந்தும் கால மென்பது பெற்றாம். கூர்ந் தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. நிலம் பைதற்ற காலை யென் றொழியாது புலங் கெடு காலை யென்றது, மழை யின்மையால் வற முண்டாக நிலம் பசுமையற்றதே யன்றி, நிலத்திடத்தே கிணறுகள் எடுத்து நீர் இறைத்து உழவு செய்வார்க்கும் கிணறுகள் நீர் வற்றி விடுதலால் புலங்களும் திண்மையுறக் காய்ந்து உழவுக் கமையா வாயின என்பது உணர்த்துதற்கு. வாங்குதல், சேரத் தொகுத்துக் கொள்ளுதல்; “கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (கலி. 134) என்றாற் போல. வழிநடை எளிதிலமைவது குறித்து எல்லா இசைக்கலங்களையும் பைக்குள் வைத்துக் கட்டிச் சுமந்து செல்ப வாதலால், “வாங்குபு தகைத்த கலப்பையர்” என்றார். இசைக் கருவிகளை இவ் வயிரியர் சுமந்து செல்லும் திறத்தை ஆசிரியர் பரணர், “வணரமை நல்யா ழிளையர் பொறுப்ப, பண்ணமை முழவும் பதலையும் பிறவும், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்” (பதிற். 41) என்பது காண்க. வயிரிய மாக்கள், கூத்தர். இக் கூத்தர் முதற்கண் ஊர்மன்றத்தை யடைந்து தம் இசைக் கருவியை இசைத்துத் தம் வரவு தெரிவித்தல் மரபாதலின், “மன்றம் போந்து” என்றும், பின்பு நெடிய மாடங்கள் நிற்கும் மறுகுகளில் உள்ள சிறைகளிற் புகுந்து நின்று பாடுபவாகலின், “மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள்” என்றும் குறித்தார். சிறை, மாடங்களின் முற்றத்தே தாழ விட்டிருக்கும் முகப்பிடம். இதன் இருமருங்கும் சிறை யெனப்படும். அதனை யொட்டிப் புறந்திண்ணையிருக்கும். “மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக், கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும், அகவலன்” (பதிற். 43) எனப் பிறரும் கூறுவது காண்க. மறுகு சிறை யென்பது இசைத் துறையுள் ஒன்று போலும் எனக் கருதுவாரு முளர். பழுமரம் நாடிச் செல்லும் பறவை போலச் செல்வரை நாடிச் சென்று அவர் தம் செல்வத்தைப் பெற்று அமைந்திருப்பதை விடுத்துத் தாம் பெற்றதனைப் பெறார்க்கும் பகுத்தளித்துப் பிற்றைநாளிற் றமது நிலையை நினையாது வாழ்பவ ராதலால், இவர்பால் பசியுண்மை இயல்பாயினும் நிலம் பைதற்ற புலங்கெடு காலை யாதலின் கடும் பசி நிற்பதாயிற்று. அது நின்ற காலத்தும், இவர்கள் பசி நீக்க மொன்றையே கருதுவதன்றிப் பொருளீட்டம் கருதாமை தோன்றக் “கடும்பசி நீங்க” என்றும்,அப் பசி நிலையறிந்து குட்டுவன் பேருணவு இனிதளித்தலால், “உண்டு மலிந்து” என்றும், “பெரிதுவந்து நெஞ்சுமலியுவகைய” ரென்றும் கூறினர். பெரிதுவந்து நெஞ்சுமலி உவகையராய் ஆட என இயையும். உவகையராய் ஆடுகின்றனரெனவே முன்னைய பசித் துன்பத்தை மறந்ததே யன்றி, வரும் நாள் எய்தவிருக்கும் இன்மையை நினையாமையும், அப்போதைய பசித் துன்பம் நீங்கப் பெற்ற மகிழ்ந்தமையும் பெற்றாம். குட்டுவன் பசி நீங்கப் பேருணவு தந்ததோடு உயர்ந்த அணிகலங்களும் நல்கினா னென்பார், “பொன்செய் புனையிழை யொலிப்ப” என்பதனாற் குறித்தார். பாணர் முதலியோர்க்குச் செய்யும் விருந்தின்கண் அவர்கட்குக் கள்வழங்க, வேந்தன் களிப்பில்லாத நறவினை யுண்பன்; அதனை யுண்ட சிறு களிப்பினால் பெருங்கலம் நல்குகின்றா னென்பார், “சிறுமகிழானும் பெருங்கலம் வீசும் குட்டுவ” என்றார். வேந்தன் உடனுண்ணும் இயல்பை, |