விரும்பும் வீரர் தம் வலக்கையில் விளங்க வேந்தி; ஆர் அரண் கடந்த தார் பகைவருடைய அரிய அரண்களை யழித் தேகும் தமது தூசிப் படையால்; அருந்தகைப் பின் - கடத்தற்கரிய பகைவரது அணி நிலையுட் பாய்ந்து; பீடு கொள் மாலைப் பெரும்படைத் தலைவ - வென்றி கொள்ளும் இயல்பினையுடைய பெரிய தானைக்குத் தலைவனே எ - று. நிலத்தினும் கடலினும் நெடுமையும் பரப்பு முடைமைபற்றி விசும்பு ‘நெடுவயி’ னெனப்பட்டது. இது நெடிதாகிய இடத்தையுடைய விசும்பென விரிதலின், அன்மொழித்தொகையாய் விசும்பிற்குப் பெயராயிற்று. புலியுறையினின்றும் கழித்த எஃகம், முகிலிடைத் தோன்றும் மின்னுப்போறலின், “நெடுவயின் மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த எஃகம்” என்றார். வாள்வாய்ப் பட்டாரது ஊன் படிந்து புலவு நாற்றம் நாறுதலின், “புலவுவா யெஃகம்” எனப்பட்டது. படைவீரர் போரே விரும்பும புகற்சியினராய் நாளும் அதன்மேற் சென்ற உள்ளத்தாற் சிறந்து நிற்குமாறு தோன்ற “மேவல் ஆடவர்”என்றார். ஏவ லாடவரெனக்கொண்டு வேந்தனது ஏவல்வழி நிற்கும் வீரரென றுரைப்பினுமாம்; “புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப” (புறம். 68) என்பதனால் வீரர் ஏவல்வழி நிற்குமாறு பெறப்படும் போர், என்பது அவாய்நிலை. இடக்கையில் தோலையேந்துதலின் “வாளை வல னுயர்த்தேந்தி” யெனல் வேண்டிற்று. புலித்தோலாற் செய்யப்பட்டதனைப் புலியுறை யென்றார். இனி, தார்ப்படையின் வன்மை கூறுவார், பல்வகைப் பொறியாலும் காத்து நிற்கும் வயவராலும் நெருங்குதற்கரிய அரண் பலவும் வருத்தமின்றி எளிதிற் கடக்கும் வன்மையுடைய தென்றற்கு “ஆரரண் கடந்ததார்” என்றார். தார், தூசிப்படை, இதனைத் தாங்கிப் பின்னே அணியுற்று வரும் படை தானை யெனப்படும்; “தார் தாங்கிச் செல்வது தானை” (குறள். 767) எனச் சான்றோர் விளக்குவது காண்க. போர்க் கருவிகளான வில், வேல், வாள் முதலியனவேயன்றி, படையினது அணிவகுப்பும் நிலையும் வன்மை நல்குவனவாதலின், அச்சிறப்பை விதந்து, “அருந் தகைப்பில்” என்றும், அதன் உட்புகுந்து பொருது கலக்கிச் சிதைத்து வென்றி காண்பதே வீரர்க்கு மிக்க வீறு தருவதாதலின், “அருந்தகைப்பிற் பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ” என்றும் கூறினார். மாற்றாரது அருந்தகைப்புட் புகுந்து கலக்கக் கருதுவோர், முன்பாகக் களிற்றினைச் செலுத்தி இடமகல்வித்து, அதன் வழியே நுழைந்து தாக்குவரென்ப; இதனைக் “களிறு சென்ற கள னகற்றவும், களனகற்றிய வியலாங்கண், ஒளிறிலையே வெஃகேந்தி, அரைசுபட வமருழக்கி” (புறம். 26) என்பதனா லறிக. இன்னோ ரன்ன அருஞ்செயல் வழிப்படும் பீடே வீரர் மம் நடுகல்லினும் பிறங்குவதா மென் றறிக. “நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம். 67) என்புழி “நல்லமர்” என்றது இதனையும் உட்கொண்டு நிற்றலை யுணர்க இத்தகைய பீடு பெறுதல் நின் படைக்கு இயல்பா யமைந்துள தென்பார், “பீடுகொள் பெரும்படை” யென்னாது, “பீடுகொள் மாலைப் பெரும்படை” யென்றார். மாலையென்ற |