வருதலின் அந்தணரை “ஆறுபுரிந்தொழுகும் அந்தணர்” என்ற ஆசிரியர். அவர்தம் உள்ளத்தே அறநூல்களின் முடி பொருளையே விரும்பா நிற்கின்றன ரென்பார். “அறம்புரி யந்தணர்” என்றார்; அறம், அறநூல்களின் முடிபொருண்மேற்று. அது வேத முதலிய நூல்களாற் கற்றுணரப்படாது இறைவனால் உணர்த்தப்படுவது. “ஆறறி யந்தணர்க் கருமறை பல பகர்ந்து” (கலி.கடவுள்) என்றும், “ஒருமுகம், எஞ்சிய பொருள்களை யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே” (முருகு 16-8) என்றும் சான்றோர் கூறுவது காண்க. சைவ நூல்களும், வேத முதலியவற்றின் ஞானம் கீழ்ப்பட்டதாகிய பாச ஞானம் என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. உலகியற் பொருளையும் அதற்குரிய அறநெறிகளையும் உள்ளவாறுணர்த்தும் உரவோராதலின், அந்தணர் வழிமொழிந் தொழுகுதல் அரசர்க்குக் கடனாதல் பற்றி, “அந்தணர் வழிமொழிந் தொழுக” வென்றார். அவ்வொழுக்கத்தாற் பயன் இதுவென்பார், “ஞாலம் நின்வழி யொழுக” என்றும், அதனால் நாடு நாடா வளம் படைத்து நல்லோர் பாராட்டும் நலம் பெறுதலின் “பாடல் சான்று” என்றும் கூறினார். நாட்டின் புகழ் நாட்டின் அரசர்க்குச் சேறலின், அரசன் மேலேற்றிச் “சான்று” என்றார். இக் குட்டுவனைப் பாடப் போந்த கௌதமனார், “உருத்துவரு மலிர்நிறை” யென்ற பாட்டினை நாடு வாழ்த்தாகவே பாடியிருப்பது காண்க. அவன் புகழ் பரவாத இடம் நாட்டில் ஒரு சிறு பகுதியு மின்மையின் “நாடுடன் விளங்கும் நல்லிசை” யென்றார். இசைக்கு நன்மை, அழியாமை, நல்லிசைக்குரிய குணஞ் செயல்கள் அவன்பால் நன்கு விளங்கித் தோன்றலின், “நாடா நல்லிசை” யென்றார். விளக்கமில்வழியே நாடுதல் வேண்டுதலின், நாடாமை விளக்க மாயிற்று. இனி, நாடாது செய்தாரை நாடி யடைதலும், நாடிச் செய்தாரை இனிது நாடாமையும் புகழ்க்கு இயல்பாதலின் “நாடா நல்லிசை” யென்றாரென்றமாம். அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகும் ஒழுக்கத்தின் பயன் அவன் சொல்லின்கண் அமைந்து கிடத்தலின் “திருந்திய இயன்மொழி” என்றார். சொல்லிற் றோன்றும் குற்றங்கள் இன்றி இனிமைப் பண்பே பொருந்திய மொழி இயல்மொழி. இனி, திருந்திய இயல்மொழி யென்பதற்குப் பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்தியமொழியென்றும் கூறுவர். திருந்திழை யென்னும் அன்மொழித்தொகை அரச மாதேவிக்குப் பெயராயிற்று. 12 - 14. குலையிழிபு...........குருசில். உரை : குலை இழிபு அறியாச் சாபத்துக் களைவு அறியா அம்பு வயவர் - நாண் களைதலறியாத வில்லையும் கையினின்று களைதலில்லாத அம்பையுமுடைய வீரரது; தூங்கு துளங்கிருக்கை போர் வேட்கையால் விரையும் குறிப்பொடு செறிந்திருக்கும் இருக்கையும்; இடாஅ ஏணி இயல் அறை - வன்மைக் கெல்லையாகிய எல்லா நலங்களும் பொருந்த வியன்ற பாசறையுமுடைய; குருசில் - வேந்தே எ - று. வில்லை வளைத்துப் பிணித்து நிற்கும் நாணினது நிலை குலையெனப்பட்டது; “வில்குலை யறுத்துக் கோலின்வாரா வெல்போர் வேந்தர்” |