(பதிற். 79) எனப் பிறாண்டும் வருதல் காண்க. களைவறியா அம்பெனவியைத்து, சாபத்தையும் அம்பையுமுடைய வயவரென்றும், வயவரது இருக்கையென்றும் இயைக்க. இருக்கையும் பாசறையுமுடைய குருசில் என முடிக்க. இன்னபொழுது போருண்டாமென் றறியாதே எப்பொழுதும் நாணேற்றியே கிடக்கும் வில்லென்றற்கு, “குலையிழி பறியாச் சாபம்” என்பது பழையவுரை. குலையிழிபறியாச் சாபமேந்திய வழி, அதற்கேற்ப அம்புகளும் கையகலாது செவ்வேயிருத்தல் வேண்டுமாகலின், “அம்பு களை வறியா” என்றார். பழையவுரைகாரரும், “அம்பு களைவறியா வென்றது, போர்வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைத லறியா வென்றவா” றென்பர். போர் நிகழ்ச்சியை யெதிர் நோக்குதலால் உள்ளம் பரபரப்பும் துடிப்பும் கொண்டு விரையும் வீரர் சோம்பி ஓரிடத்தே குழீஇயிருக்கவு மாட்டாது, அரசன் ஏவாமையின் போர்க்குச் செல்லவுமாட்டாது இருக்கும் அவர்தம் இருப்பினை, “தூங்கு துளங் கிருக்கை” யென்றார்; “புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப” (புறம். 68) என்பதனாலும் இப் பொருண்மை யுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், “தூங்கு துளங்கிருக்கை யென்றது, படை இடம் படாது செறிந்து துளங்குகின்ற இருப்பு என்றவா” றென்பர். இடாஅ ஏணி என்றது, எல்லையாகிய பொருட்கு வெளிப்படை. இனி, ஏணிக் குருசில் என இயைத்து, போர் வன்மைக் கெல்லையாகிய குருசில் என்றுரைப்பினுமாம்; “கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்” (முருகு. 133-4) என்றாற்போல. இடாஅ ஏணியாவது “அளவிடப்படாத எல்லை” என்று பழையவுரை கூறும். பழையவுரைகாரர், “பாசறை அறையெனத் தலை குறைந்த” தென்றும், “இயலென்றது பாசறைக்குள்ள இயல்” பென்றும் கூறுவர். பாசறைக்குரிய நலங்கள், புரிசையும் இருக்கையும் அரணும் மெய்காப்பாளரும் காலக் கணக்கரும் உழையரும் நன்கமைந்த நலங்கள். “காட்ட இடுமுட் புரிசை யேமுற வளைஇப், படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி” (முல்லைப். 26-8) எனப் புரிசையும், “நற்போர், ஓடா வல்வில் தூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை” (38-40) என இருக்கையும், “பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து, வாங்கு வில்லரணம்” (41-2) என அரணமும், “துகில் முடித்துப் போர்த்த தூங்க லோங்க நடைப், பெருமூதாளர்” (53-4) என மெய்காப்பாளரும், “பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்” (55) எனக் காலக்கண கரும், “உடம்பினுரைக்கு முரையா நாவிற், படம்புகு மிலேச்சர் உழையராக” (65-6) என உழையரும் பாசறைக்கு நலங்களாக ஆசிரியர் நப்பூதனார் கூறுதல் காண்க. 15 - 17. நீர்நிலம்.................கண்டிகுமே. உரை : நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் அளந்து கடை அறியினும் - நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் விசும்புமாகிய ஐந்தனையும் அளந்து முடிவு காணினும்; அளப்பரும் குரையை - அறிவு முதலியவற்றால் அளந்து எல்லை காண்பதற்கரியை யாவாய்; நின் வளம் வீங்கு |