பெருக்கம் - நின்னுடைய செல்வம் பெருகிய நலத்தை; இனிது கண்டிகும் யாங்கள் இனிது கண்டறிந்தோம் எ - று. நில முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலக மென்பதைக் கண்ட பண்டைத் தமிழ் நன்மக்கள், நிலமுதலிய ஒவ்வொன்றின் அளவையும் அளந்து காண முயன்று அளத்தற் கரியவையெனத் துணிந்தன ராதலின், அளப்பரிய பிற பொருள்கட்கு அவற்றை உவமமாக எடுத்தோதுவதை மரபாகக் கொண்டனர்; அதனால் குட்டுவனுடைய அறிவு, ஆண்மை, பொருள் முதலியவற்றாலாகிய பெருமையைச் சிறப்பித்து, “அளப்பருங் குரையை” என்றார். பிறரும், “நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின், அளப்பரி யையே” (பதிற். 14) என்றும், “நிலத்தி்னும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு மாரள வின்றே” (குறுந். 3) என்றும் கூறுதல் காண்க. கடை, முடிவு, நிலம், நீர், தீ வளி விசும்பென்றல் முறையாயினும் செய்யுளாதலின் பிறழ்ந்துநின்றன. அறியினும் என்புழி உம்மை எதிர்மறை. குரை : அசைநிலை. குட்டுவனுடைய செல்வம் முதலிய நலங்கள் நாளும் பெருகுதலால், “வளம் வீங்கு பெருக்க” மாயிற்று. அளத்தற் கரியனாயினும், காட்சிக் கெளிமையும் இனிமையு முடையனாதல் பற்றி, “இனிது கண்டிகும்” என்றும், அவ்வெளிமை யொன்றே அவனது பெருநலத்தை வெளிப்படுத்தலின், “வளம் வீங்கு பெருக்கம்” என்றும் கூறினார்; “பணியுமா மென்றும் பெருமை” (குறள். 978) என்று சான்றோர் கூறுதல் காண்க. வளம் வீங்கு பெருக்கமெனத் தொகுத்தது மேலே விரிக்கப்படுகிறது. 18 - 30. உண்மரும்...............வளனே. உரை : வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர - விளங்குகின்ற கதிர் வானமெங்கும் பரந்து திகழ; வடக்கு வறிது இறைஞ்சிய சீர் சால் வெள்ளி - வடதிசைக்கண் சிறிதே சாய்ந்து தோன்றும் சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்; பயங்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப - பயன் பொருந்திய ஏனை நாண் மீன்களுடனே தனக்குரிய நாளிலே நிற்க; கலிழும் கருவியொடு - நீரைச் சொரியும் மழைத்தொகுதியுடன்; கையுற வணங்கி - பக்க வானத்திற் றாழ்ந்து; மன்னுயிர் புரைஇய - மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி; வலன் ஏர்பு இரங்கும் - வலமாக எழுந்து முழங்கும்; கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை கீழ்க்காற்றுக் கொணரும் தண்ணிய மழைத் துளியால் நிறைந்த சூல் கொண்ட கருமுகிற் கூட்டம்; கார்எதிர் பருவம் மறப்பினும் கார்காலத்து மழைப்பெயலைப் பெய்யாது மறந்தவழியும்; தொடி மழுகிய உலக்கை வயின்தோறு - பூண் தேய்ந்த உலக்கையிருக்கும் இடங்கடோறும்; அடைச்சேம்பு எழுந்த ஆடுறுமடாவி்ன் - அடையினையுடைய சேம்பு போன்ற சோறு சமைக்கும் பெரும்பானையும்; எஃகுறச் சிவந்த ஊனத்து - கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால் |