இயைத்து முடிப்பினுமாம். தேரிற் கட்டிய துகிற் கொடிக்கு, பெருமலை வரையிழி அருவியை யுவமங் கூறினாராதலின், அதற்கேற்பத் தேரை “நெடுந்தேர்” என்றார். குதிரையின் செலவினைச் சிற கென்றமையின், அஃது ஆகுபெயராய்ப் புள்ளுக்காய்க் குதிரைக் குவமையாயிற்று. “புள்ளியற் கலிமா” (ஐங். 486) எனச் சான்றோர் கூறுவது காண்க. அகைதல், மிகுதல்; ஈண்டுச் செலவின் கடுமை மிகுதிமேற்று. பழையவுரைகாரர், “செலவின் கடுமை யாற்றல் தோன்றப் பறவையாகக் கூறுவான், உபசார வழக்குப்பற்றிச் சிறகு அகைப்ப வென்றான்” என்பர். பணிந்து திறை பகர்ந்து நட்புப்பெற்றொழியாது இகலி முரண்கொண்டு பொருதழிந்தமையின் பகைவரைப் “பிறர்” என்றார். 1 - 9. மாவாடிய.........................மன்னிய. உரை : மா ஆடிய புலம் நாஞ்சில் ஆடா - நின் குதிரைப்படை சென்று பொருத வயல்கள் கலப்பைகள் சென்று உழக் கூடாதனவாய் அழிந்தன; கடா அஞ் சென்னிய யானையினம் பரந்த புலம் - மதஞ் சொரியும் தலையும் கடுத்த பார்வையுமுடைய யானைப்படை பரந்து நின்று பொருத வயல்கள்; வளம் பரப்பு அறியா - வளம் மிகப் பயத்தல் இலவா யழிந்தன; நின் படைஞர் சேர்ந்த மன்றம் - நின் காலாட்படைகள் நின்று பொருத ஊர் மன்றங்கள்; கழுதை போகி (பாழாயின) - கழுதை யேர் பூட்டிப் பாழ் செய்யப்பட்டன; நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா - நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வா ரின்மையான் கதவு முதலிய காப்பு வைக்கப்படா தழிந்தன; கடுங் கால் ஒற்றலின் - மிக்க காற்றெழுந்து மோதுதலால்; சுடர் சிறந் துருத்து - சுடர்விட் டெழுந்து மிக்குற்று வெதுப்ப; பசும் பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின் - பசிய பொறிகளையுடைய ஒள்ளிய காட்டுத் தீ பரந்த பக்கத்தோடு கூடிய; ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி காட்டுக்கோழி யுலவும் காடுகள் தீய்ந்து போன கடிய வழிகளும்; முனையகன் பெரும் பாழாக மன்னிய - ஆறலைப்போர் தங்கி வழிச் செல்வோரை வருத்தும் முனையிடமுமாகிய அகன்ற பெரிய பாழிடங்களாய அழிவுற்றன எ -று. போகி யென்னும் வினையெச்சத்தைப் பாழாயின வென ஒரு சொல் வருவித்து முடிக்க. மருங்கினோடு கூடிய கடு நெறியினையும் முனையினை யுமுடைய அகன் பெரும் பாழ் என வியையும். படைக்குதிரைகள் பந்தி பந்தியாய்ச் சென்று வலமும் இடமும் சுழன்று பொருதலால் வயல்கள் உழவர் ஏரால் உழுது பயன்கொள்ளா வகையிற் பாழ்பட்டன வென்பார், “நாஞ்சில் ஆடா” என்றார்; ஆடல் முன்னது பொருதலும் பின்னது உழுதலுமாம். யானைகளின் காலடியால் மென்புலமாகிய வயல் அழுந்தி வன்னிலமாய் வளம் பயக்கும் பான்மை சிதைந்து போதலால். “யானையினம் பரந்தபுலம் வளம்பரப் பறியா” என்றார். சென்னிய வென்னும் பெயரெச்சக் குறிப்பு யானை யென்னும் பெயர் கொண்டது. கடாச்சென்னி, கடாஞ் சென்னிய |