இதுவுமது. பெயர் : காடுறு கடுநெறி. 1 - 5 தேஎர்...........வருமே. உரை : தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா - தேர்கள் செல்லுதலாற் சேறுபட்ட வயல்கள் பின்னர் ஏர்கள் சென்றுலவி உழுதலை வேண்டா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா - பன்றிகள் உழுத கொல்லைகள் கலப்பையால் உழப்படுதலை வேண்டா; மத்து உரறிய மனை இன்னியம் இமிழா - தயிர் கடையும் மத்தின் ஒலி முழங்கும் ஆய்ச்சியர் மனைகள் இனிய வாச்சியங்களின் முழக்கிசை கேட்கப்படா; ஆங்கு - அவ்விடத்தை; பண்டு நற்கு அறியுநர் - முன்பு நன்றாகக் கண்டறிந்தவர்; செழு வளம் நினைப்பின - அப்போதிருந்த செழுமையான வளத்தை இப்போது நினைப்பா ராயின்; நோதக வரும் - நினைக்கும் நெஞ்சு நோவத்தக்க வருத்தமுண்டாகும்; யான் நோகு - யானும் அதனை நினைந்து வருந்தாநிற்கின்றேன் எ - று. பகைவர் நாடழிந்தது கண்டு, அவ் வழிவின் மிகுதியைப் புலப்படுத்தற்கு அவற்றின் பண்டைய நிலையினையும் உடன் குறிக்கின்றார். அந் நாட்டவர் பலரும் செல்வராதலின் அவர் தேர்கள் வயலிடத்தே செல்லின், அவை பின்பு ஏரால் உழப்படுதலை வேண்டாதே சேறுபட்டு வித்தி்ப் பயன்கொள்ளற் குரிய பண்பாட்டினை யெய்தும் என்பார், “தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா” என்றார். ஏஎர், மென்புலமாகிய நன்செய்களையுழும் கலப்பை “தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவாவென்றது, ஒருகால் தேர் பரந்த வயல் அத் தேர் பரந்த மாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர் பரவா என்றவா” றென்பர் பழையவுரைகாரர். இது மென்புல வைப்பின் நலம் கூறிற்று. புன் செய்களாகிய கொல்லைகளைப் பன்றிகள் உழுது பண்படுத்திவிடுதலின், அவையும் முற்கூறிய நன்செய்களைப் போலவே கலப்பைகளைக் கொண்டு உழவேண்டாவாம் என்பார், “களிறா டியபுல நாஞ்சி லாடா” வென்றார். “கடுங்கட் கேழ லுழுத பூழி, நன்னாள் வருபத நோக்கிக் குறவர், உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை” (புறம். 168) எனப் பிறரும் கூறுதல் காண்க. களி றென்றது ஈண்டு ஆண்பன்றியினை; “வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்” என்ற ஆசிரியர், “கேழற் கண்ணும் கடிவரை யின்றே” (தொல். மரபு 34-5) என்றலின், ஆண் பன்றி களிறெனப்பட்டது. கொல்லையில் தானே முளைத்திருக்கும் கோரையின் கிழங்கை யுண்டற்குப் பன்றிகள் நிலத்தைக் கிளருதல் பற்றி, “களிறாடிய புலம்” என்றார்; “கிழங்ககழ்கேழல் உழுத சிலம்பு” (ஐங். 270) என்று பிறரும் கூறுவர். பழையவுரைகாரர், “களிறாடிய புலம் நாஞ்சி லாடா வென்றது, பன்றிக ளுழுத கொல்லைத் தறை அமை உழுத மாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்பை வழங்கா வென்றவா” றென்பர். மென்புலம் உழுவதை ஏர் என்றும், வன்புல முழுவதை நாஞ்சில் என்றும் வழங்குப. இக் கொல்லைகளைச் சார்ந்துள்ள ஆயர் மனைகளின் வளம் விளம்புவார், ஆங்குப் பால் வளம் சிறந்திருத்தலால் மனைதோறும் தயிர் |