கடைபவரின் மத்தொலியே பெரிதும் முழங்குதலால், அம் முழக்கினை விஞ்சமாட்டாது ஆண்டுள தாகும் மங்கல முழவு முதலியவற்றின் இசையொலி கேட்பார் செவிப்புலத்தை யெட்டா தொழியு மென்பார், “மத்து ரறிய மனை யின்னிய மிமிழா” என்றார். “மத்தொலிக்கின்ற மனைகள் அம் மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களின் ஒலிகிளரா” என்று பழையவுரைகாரர் கூறுவர். அந் நாடுகளின் வள மிகுதியைப் பொதுவாக அறிந்தோரினும் சிறப்பாக அறிந்தோர்க்கே அவ் வளத்தின் கேடு இனிது விளங்கும் என்பதுபற்றி, “ஆங்குப் பண்டு நற்கறியுநர்” என்றும், அவர் கண்ட மாத்திரையே அழிவு மிகுதியாற் செயலற்றுப் போவராதலின், “நினைப்பின்” என்றும், நினைக்கலுற்றவழி, பண்டு கண்ட வளத்தின் மிகுதி அவர் நினைவில் தோன்று மாதலின், “செழுவளம் நினைப்பின்” என்றும், அதனால் அவர் நெஞ்சு நொந்து வருந்துவ தொருதலையாதலால் “நோதக வருமே” யென்றும் கூறினார். நன்கு, நற்கென விகாரமாயிற்று; “அது நற் கறிந்தனையாயின்” (புறம். 121) என்றாற்போல நன்கு அறிந்தோருள் தாமும் ஒருவராதல் தோன்ற, “நோகோ யானே” யென்றார். ஓகாரம், அசைநிலை. நோகு, தன்மை வினைமுற்று. இவ்வாற்றல் பகைவர் நாட் டழிவின் பொதுவியல்பு கூறினார். இனி, அதன் இயல்பைச் சிறப்புறக் கூறுகின்றார். 6 - 14. பெயல்மழை..............நாடே. உரை : முருகு உடன்று கறுத்த கலியழி மூதூர் - முருகவேள் வெகுண்டு பொருதழித்தலால் செல்வக் களிப்பிழந்த மூதூர்களைப் போல; உரும்பில் கூற்றத் தன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய நாடு பிறரால் நலிவுறுதல் இல்லாத கூற்றினை யொத்த நின்னுடைய திருந்திய தொழிலையுடையவீரர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகள்; பெயல்மழை புரவின்றாகி - காலத்தி்ற் பெய்தலையுடைய மழை பெய்யாமற் பொய்த்தமையால்; வெய் துற்று வெயிலது வெம்மை மிகுதலால்; வலம் இன்று - நாடு நலம் பயப்பதின்றாயிற்று; காலையது பண்பு என - இஃது அல்லற் காலத்தது பண்பா மெனச் சொல்லி; கண் பனி மலிர் நிறை தாங்கி - பனித்த கண்ணில் நீர் நிரம்பத் தாங்கி; மெலிவுடை நெஞ்சினர் - வலியழிந்த மனமுடையரான பகைப்புலத்து மக்கள்; கை புடையூஉ - செயலறுதி தோன்றத் தம் கையைப் புடைத்து; சிறுமை கூர - வருத்த மெய்த; பீர் இவர் வேலிப் பாழ்மனை - பீர்க்கின் கொடிபடர்ந்த வேலி சூழ்ந்த பாழ் மனைகளும்; நெருஞ்சிக் காடுறு கடு நெறியாக மன்னிய - நெருஞ்சி முட்கள் காடுபோல் செறிந்த வழிகளுமாக நிலைபெற்றன எ - று. உரிய காலத்தில் மழையினைப் பெய்து உலகத் துயிர்களைப் புரத்திற்குரிய மழை பெய்யாது பொய்த்தமையின், “பெயல் மழை புரவின்றாகி” யென்றும், அதனால் வெயிலது வெம்மை மிக்கு உயிர்கட்கு வருத்தம் |