நன்செய்ப் புலத்திற் செல்லும்; வல் வாய் உருளி - பண்டியின் வலிய வாயையுடைய உருளையானது; அள்ளற்பட்டுக்கதுமெனமண்ட - சேற்றின் கண் இறங்கிச் சட்டென அழுந்தி விடுதலால்; சாகாட்டாளர் - அப்பண்டியைச் செலுத்துவோர்; துள்ளுபு துரப்ப - துள்ளியுரப்பி எருதுகளைச் செலுத்த; நல் லெருது முயலும் அளறு போகு விழுமத்துக் கம்பலை யல்லது - நல்லெருதுகள் முயன்று ஈர்த்துச் சேற்றினின்று கழிந் தேகும் வருத்தத்திடைப் பிறக்கும் ஆரவாரமு மல்லது; பூசல் அறியா நன்னாட்டு - வேறே போராரவாரம் கேட்டறியாத நல்ல நாட்டின்; யாணர் அறா அக்காமரு கவின் - புது வருவாய் குன்றாத விருப்பம் பொருந்திய அழகானது; நீ சிவந்தனை நோக்கலின் - நீ வெகுண்டு சீறிப் பார்த்ததனால்; மன்ற சிதைந்தது - தெளிவாகச் சிதைந் தழிவதாயிற்று, காண் எ - று. எல் வளை மகளிர் மடிவையராய்த் தெறுமார் மருதமேறி இசைப்பின் என இயைக்க ஆண்டு முழுதும் தொடர்ந்து மலரும் இயல்பிற்றாதலின். குவளையைத் “தொடர்ந்த குவளை” யென்றார். இனி, குவளையின் தூநெறிகள் சாம்பி யுதிர்ந்தவழிப் புதியன தொடுத்து இடையறலின்றி யஃது இருக்குமாறு செய்தலின் இவ்வாறு கூறினா ரென்றும், தொடுப்போர் தொடர்புறுத்தத் தொடரும் குவளையைத் தொடர்ந்த குவளையென்றா ரென்றும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், “ஆண்டுகள் தோறும் இட்டு ஆக்க வேண்டாது தொண்டு (பண்டு) இட்டதேயீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும்” என்றும், “இச் சிறப்பானே இதற்குத் தொடர்ந்த குவளை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். புறவித ழொடித்த முழுப்பூவைத் தூநெறி யென்றார். குவளை, செங்கழுநீருமாம். குவளையும் ஆம்பலும் பைந்தழையும் விரவித் தொடுக்கப்படும் தழை யுடையில் ஆம்பற் பூவை இடையிட்டு ஏனையவற்றை அதனைச் சூழத் தொடுத்த தழை யுடை ஈண்டு “ஆம்ப லக மடிவை” யெனப்பட்டது. இவ்வாறன்றிப் பல்வகைப் பூக்களையும் வண்ணம் மாறுபடத் தொடுக்கப்படுவது பகைத் தழை யெனப்பட்டது; இருவகையும் ஒருங்கமையத் தொடுப்பது முண்டு; அதனை, “அம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்” (அகம். 226) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, டாக்டர் உ வே. சாமிநாதைய ரவர்கள் “அலர்ந்த வாம்ப லம்பகை மடிவையர்”என்று பாடங் கொள்ளினும் பொருந்து மெனக் கூறுவர். குவளையும் ஆம்பலும் பிறவும் விரவித் தொடுக்கப்படுதலின், “குவளைத் தூநெறி யடைச்சி, அலர்ந்த ஆம்பல் அகம்படத் தொடுத்த மடிவையர்” என்றார். அடைச்சி யென்னும் வினையெச்சத்தை அகம் என்புழித் தொக்குநின்ற வினையொடு முடிக்க. குவளையும் தழையுடைக்கண் விரவித் தொடுக்கப்படுதலை,“குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்”(புறம். 116) என்று சான்றோர் கூறதலா லறிக. இனி, குவளைத் தூநெறியைக் கூந்தலில் அடைச்சி யென்று கொண்டு பொருள் கூறுவாரு முளர். இயவர் தம் சென்னியிற் கண்ணி சூடலும் கள்ளுண்டலும் உடையராதலின், “சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி, அரிய லார்கையர்” |