என்றார். தலைமயிர் சுருண்டிருத்தல் பற்றிச் “சுரியலஞ் சென்னி” யென்றும், பொற்பூவாற் செய்யப்பட்ட கண்ணி யன்றென்பதற்குப் “பூஞ்செய் கண்ணி” யென்றும் கிளந் தோதினார். இசையைக் கேள்வியொடு (சுருதி) கூட்டிக் கேட்டார்க்கு இன்ப முண்டாகப் பாடுதலின், “இனிது கூடியவர்” என்றார். இவர் உழவரினத்து இயவர் இவர் தாம் நீர்த் துறையிடத்து நிற்கும் பொழிலகத்தே யுறைபவராதலின், அத் துறை “இயவர் துறை”எனக் கிழமை கூறப்பட்டது. நெற்கதிரை மேயும் மயிலினத்தை இவ் விளமகளிர் ஒப்பியவழி, அவை சென்று துறை யருகிருக்கும் மருத மரத்தில் தங்குதலின், இவர்கள் தம் மருதத்தி்லேறி அவற்றை யோப்புவா ராயினர். “செந்நெலுண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளி ரோப்பலின் பறந்தெழுந்து, துறைநணி மருதத் திறுக்கு மூதூர்” (புறம். 344) என்று பிறரும் கூறுவர். வளையணிந்த மகளிரெனவே இளையராதல் பெற்றாம். கவணும் தட்டையும் பிறவும் கொண்டு புட்களை யோப்பும் திறம் இலராதலின், இம் மகளிர் தம் குரலெடுத்து விளித்தும் இசைத்தும் பாடினரென்றும், அப் பாட்டிசைதானும் இயவரது இயவொலி போறல் கண்டமயில், அவ் வொலிக் கேற்ப ஆடுதல் செய்ததேயன்றி நீங்கிற் றன்று; அதனைக் காண்போர் செய்யும் ஆரவாரத்தை, “பழனக்காவில் பசுமயிலாலும் கம்பலை” யென்றார். இனி, பழையவுரைகார், “மகளிர் தெறுமார் இசைப்பின், காவிற் பசுமயில் ஆலும் என்றது, வயலிற் புகுந்து உழக்காதிருத்தற்பொருட்டு அவ்வயற் புள்ளோப்பும் உழவர்மகளிர், அதனைக் கடிய வேண்டித் தெள்விளி யெடுப்பின், இயவர் இயங்களின் ஒலி கேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின் ஒலியாகக் கருதி மயில் ஆலு மென்றவாறு” என்பர். மயில் ஆலும் கம்பலை, அளறு போகும் விழுமத்துக் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு என இயையும். பொய்கையிடத்து மிக்க நீர்கழிவது குறித்துச் செய்துள்ள வழியினை “வாயில்” என்றும், மிக்குற்று விரைந்து நீங்கும் நீரைத் தடுத்தற் பொருட்டு அவ் வாயிலில், நிறுத்த கதவு நீரால் தாக்குண்டு எதிர்த்து நிற்கும் இயைபு தோன்றப், “புனல்பொரு புதவின்” என்றும், அதன் வழிப் பொசிந்தோடு நீரால் மருங்குள்ள வயல்களி்லும் கால்களிலும் நெய்தல்கள் நிரம்பப் பூத்திருத்தலால் அவற்றின் தாதூதி முரலுதல் கள்ளுண் வண்டிற்கு முறைமையாயிற் றென்பார், “நெய்தல் மரபின் நிரைகள்” என்றும் கூறினர்; வயலின்கண் எழும் கம்பலையைக் கூறுவார், வண்டினம் கூட்டம் கூட்டமாய் நிரைத்துச் சென்று தேனை யுண்டல் பற்றி, அவற்றை “நிரைகள்” ளென்றார். இனி, இரவெல்லாம் தாமரை முதலிய பூக்களில் துஞ்சிய வண்டினம், விடியலில் எழுந்து போந்து தேனுண்ணுமாறு மலரும் மரபிற்றாகிய நெய்தலின் புதுத்தேனை நாடி யுண்டலை மரபாக வுடைமைபற்றி வண்டினத்தை இவ்வாறு கூறினாரெனினும் அமையும். “வைகறை மலரும் நெய்தல்” (ஐங். 188) எனப் பிறரும் கூறுப. பழையவுரைகாரர், “நெய்தல் மரபின் நிரைகட் செறு என்றது, இடையறாது பூக்கும் மரபினையும் வண்டினையுமுடைய செறு” என்றும், கள்ளென்பது வண்டென்றும் கூறுவர். வண்டு, மூசும் செறுவின்கட் புக்கதும் சாகாட்டின் ஆழி, சட்டெனச் சேற்றிற் புதைந்து விடுதலால், “கதுமென மண்ட” என்றார்; எனவே, செறுவும் ஆழ வுழப்பட்டுச் சேறு மிகப் பொருந்தியிருத்தல் பெற்றாம். அவ்வாறு |