ஆழ்தற்கேற்ற திண்மையும் வன்மையும் ஆழிக்கு உண்மை தோன்ற, “வல்வாயுருளி” என்றார். உருளி, ஆழி உருளியானது அள்ளற்பட்டுக் கதுமென மண்டலும், சாகாட்டினை யீர்த்தேகும் எருது மாட்டாமையால் திருகலி்ட்டு மயங்குதலால், அம் மயக்கந் தீர்தற்பொருட்டுச் சாகாட்டாளர் துள்ளிக் குதித்துப் பேரிரைச்சலிட்டு அவ் வெருதுகளை யூக்கித் தூண்டுதலின் ‘துள்ளுபு துரப்ப’ என்றும், மாட்டாது மடங்கிப் படுக்கும்ஏனை வலியில்லாத எருதுகளைப் போலாது தம் வன்மை முழுதும் செலுத்தி மூக்கொற்றியும் தாளூன்றியும் அள்ளற் சேற்றினின்றும் நீங்க வலிக்கும் முயற்சி நலமுடைமையின் “நல்லெருது” என்றும், அளற்றின் நீங்கிக் கழியப் போகுமிடத்துச் சிறிது தாழ்ப்பினும் முன்போல் ஆழப் புதையுமென்பது கருதிப் பேராரவாரம் செய்தூக்கிச் செலுத்தாலால், “அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை” என்றும் கூறினார். கம்பலை நிகழ்தற்கு விழுமம் இடமாயினும், நிகழ்த்துவோர் இவ ரென்றற்குச் சாகாட்டாளரையெடுத்தோதினார். விழுமம் துன்பம். “அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே” (மதுரை. 259-60) என்று பிற சான்றோரும் கூறுதல் காண்க. அந் நன்னாட்டில் மக்களிடையே பகையும் நொதுமலும் அச்சமும் இன்மையின், அவை காரணமாகப் பிறக்கும் போர்ப்பூசல் இல்லை யென்பார், “சாகாட்டாளர் கம்பலை யல்லது பூசலறியா நன்னாடு” என்றார். இறந்தது தழுவிய வெச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. இன்ன நன்னாட்டில் நாளும் புது வருவாய் நிலவுவதால் எந்நிலத்தவரும் விரும்பும் ஏற்றமும் அழகும் இதன்பால் உளவாயின என்பார், “யாணர் அறாஅக் காமரு கவின்” என்றும், தன்னைத் தெறுமார் மகளி ரெடுத்த தெள்விளி கேட்டு ஆலும் பசுமயில் போல, இந் நாட்டவர் நி்ன் போர்ப் பூசல் கேட்டுப் பணிந்து திறை செலுத்தி, அருள் பெறாது கெட்டன ரென்பார், “சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்” என்றும் கூறினார். “சிவந்தனை நோக்கலின்” என்றது குட்டுவனது சினத்தின் கடுமை தோற்றி நின்றது. பகைவர் நாட்டழிவின் மிகுதிநோக்கி, “சிதைந்தது மன்ற” என்றார். “துள்ளுபு துரப்ப வென்றது, சாகாட்டாளர் துள்ளித் துரக்கையாலே என்றும், அளறு போகு... வருத்தமென்றும்” பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும் கூறியது, பழனக் காவில் பசுமயில் ஆலும் கம்பலையேயன்றிச் செறுவின்கட் சாகாட்டாளர் கம்பலையு மல்லது வேறு பூசலறியாத நன்னாட்டுக் காமரு கவின், நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது மன்ற என்பதாம். பழையவுரையும், “நன்னாட்டுக் கவின் நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது என வினைமுடிவு செய்க” என்றது. வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப், பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் (தொல். பொ. 82) என்பதனால் இஃது அரசனைப் புகழ்தற்கண் வந்த பாடாண்பாட்டாய்ச் செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று. இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. |