பகைவருடைய; பைங்கண் யானைப் புணர் நிரை துமிய - பசிய கண்ணையுடைய யானை கலந்த படை வரிசை கெடுமாறு; உரம் துரந் தெறிந்த - தமது வலியைச் செலுத்தி யெறிந்த; கறையடிக் கழற்கால் கடுமா மறவர் - குருதிக் கறைபடிந்த கழற் காலும் கடுமாப்போலும் விரைந்த செலவுமுடைய வீரர்; கதழ் தொடை மறப்ப - மிக்க விசையுடன் செலுத்தும் தமது விற்றொழிலை மறக்கும்படியாக; இளை இனிது தந்து - காவற் றொழிலை இனிது செய்து; விளைவு முட்டுறாது விளை நலம் குன்றாதாக; புலம்பாவுறையுள் தொழில்-அவ்வீரர் தமக்குரியவரைப் பிரிந்துறைதலின்றி அவரோடு கூடி இனிதிருக்கும் செயலை; ஆற்றலின் - நீ நின் நாடு காத்தற் றொழிலால் எய் துவிக்கின்றா யாகலான்; திருவுடைத்து - நினது நாடு மிக்க திருவினை யுடைத்து எ- று. நின் அகன்றலை நாடு, செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யரிது; அதற்குக் காரண மென்னையெனின், நீ தொழி லாற்றலின், நின்னாடு திருவுடைத்து என இயையும். அம்ம, உரையசை. அருமை, இன்மை குறித்துநின்றது. வேந்தர்க்குப் பெருமை தருவது அவருடைய அறிவு ஆண்மை பொருள்களே யன்றிப் படையுமாதலின், அப்படைப் பெருமை தோன்ற, “பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை” யென்றார். “யானையுடைய படை காண்டல் முன்னினிதே” (இனியது 40) என்பது பற்றி யானைப்படை விதந்து கூறப்பட்டது. யானைகள் இயல்பாகவே தம்மில் ஒருங்கே அணிவகுத்துச் செல்லும் இயல்பின வாதலின், அவற்றைப் “புணர்நிரை” யென்றார். அப் படையினைப் பொருது சிதைப்ப தென்பது மிக்க வன்மையுடையார்க்கே இயலுவதா மென்பது எய்த, “துமிய” என்றும், துமிக்கு மிடத்தும், வீரர் தமது வன்மை முழுதும் செலுத்திப் பொருவர் என்பார். “உரம் துரந்து எறிந்த” என்றும் கூறினார். வில் வீரரது வென்றி மாண்பு அவரது அகன்றுயர்ந்த மார்பின் வன்மையைப் பொறுத்திருத்தலால் உரத்தையெடுத் தோதினா ரென்றுமாம். துமிந்தவற்றின் குருதி வெள்ளத்தில் நின்று பொருதலால், அவருடைய காலடி குருதிக்கறை படிதலின் “கறையடி” யெனப்பட்டது. பழையவுரைகாரரும் “கறையடி யென்றது குருதிக் கறையினையுடைய அடியென்றவா” றென்பர். கடுமா, விரைந்து செல்லும் இயல்பினவாகிய விலங்குகள். கடுமாப் போலும் விரைந்து செல்லும் இயல்பின்வழி யானைப்போரில் வென்றி பெறல் அரிதாதலின், “கடுமா மறவர்” என்றார்; “கடுமாப் பார்க்கும் கல்லாவொருவன்” (புறம் 189), என்புழிப் போல. இனி, கடுமாவைக் குதிரை யென்று கொண்டு, கடுமா மறவ ரென்றது, குதிரைமேல் வீரரை யெனக் கூறுவாரு முண்டு. இவ்வாறு போர் கிடைத்தவழிப் பேராண்மை காட்டிப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் அது கிடையாமல் மடிந்திருக்கும் திறம் கூறலுற்று, மிக்க விரைவொடு செல்லும் அம்பு தொடுக்கும் விற்றிறத்தை அவர் மறந்தனர் என்பார், “கதழ் தொடை மறப்ப” என்றும், அதற்குக் காரணம் குட்டுவன் நாடு காவலை நன்கு ஆற்றியதும் வேண்டும் பொருள் இனிது விளைந்ததுமே |