யென்பார், “இளை யினிது தந்” தென்றும், “விளைவு முட்டுறாது” என்றும் கூறினார். பழையவுரைகாரரும், “மறவர் கதழ் தொடை மறப்ப இளை யினிது தந்து என்றது, நின் வீரர் போரில்லாமையால் விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும்படி நாடு காவலை இனிதாகத் தந்தென்றவா” றென்பர். இளை, காவல். முட்டுறாது என்றது, முட்டுறாதாக என்றவாறு; “விளைவில் முட்டுறாமல் எனத் திரிக்க” வென்பர் பழையவுரைகாரர். இவ்வாற்றல் வினைவயிற் பிரிவும் பொருள்வயிற் பிரிவும் ஆண்மக்கள்பால் இன்மையின், மனைவாழ்க்கையில் தனித்திருந்து வருந்தும் பிரிவு இலதாதலின், “புலம்பாவுறையுள் தொழில்” உளதாயிற்று. இதற் கேதுவாய அரசாட்சி நலத்தை யாப்புற வுணர்த்தற்பொருட்டு, “இளையினி தந்” தென்றதனையே “நீ ஆற்றலின்” என்று மீட்டும் கூறினார். இனி, அவன் காவற் சிறப்பைக் கட்டுரைக்கலுற்ற ஆசிரியர், நீர் நலத்தை விரித்தோதுமாற்றல் விளக்குகின்றார். மாரிக்கண் உண்ட நீரைக் கோடைக்கண் அருவி வாயிலாக உமிழும் வாய்ப்பினையுடைய குன்றம், அக்கோடை நீட எங்கும் பெருவறங் கூருமிடத்து, உயர்ச்சியால் குளிர்ந்து பசுந்தழை போர்த்து அழகு திகழ விளங்கும் பொலி விழந்து புல்லென்றாதலின், “கோடை நீடக் குன்றம் புல்லென” என்றும், எனவே, அக்காலத்து அருவிகளும் நீர் வற்றி விடுதலின், “அருவியற்ற பெருவறற் காலையும்” என்றும் கூறினார். பழையவுரைகாரர், கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி அருவியற்ற காலையும் எனக் கூட்டி யுரைக்க வென்பர். இக்காலத்தும் குட்டுவன் நாட்டில் பேரியாறு கரை புரண்டோடும் மிக்க நீருடையதாமென்பார், “நிவந்து கரை யிழிதரும் நனந்தலைப் பேரியாறு” என்றார். யாற்றுநீர் பாயும் பக்கத்தே கிடப்பது விளை புலத்துக்குச் சிறப்பாதல் பற்றி, “சீருடை வியன்புல” மென்றார். கோடையிலும் மிக்க நீர் பெருகு மென்றலின், அது பாயுமிடத்துக் கோடையால் உலர்ந்து வெடித்துக் கரம்பாய்க் கிடக்கும் புலங்களெல்லாம் அவ் வெடிப்பு நிறைய நீர் நிரம்பித் தேங்கும் என்பார், “விடுநிலக்கரம்பை விடரளை நிறைய” என்றார். நீர் இனிது ஏறமாட்டாமையின் வேளாண்மைக்குப் பயன்படாது புல் வகை வளர்ந்து விலங்குகள் மேயுமாறு விடப்பட்ட கரம்பு நிலத்தை “விடுநிலக் கரம்பை” என்றார். வேளாண்மைக்குப் பயன்படாக் கரம்பாயினும், விலங்குகள் மேய்தற்குப் பயன்படுதல் குறிக்கற்பாற்று. இதனால், ஏறமாட்டாத மேட்டுப் பாங்கரினும் நீரேறி நிரம்புமாறு கோடையிலும் பேரியாறு நீர் பெருகிப் பாயுமென்பது கருத்தாயிற்று. “கரம்பை விடரளை நிறைய வென்றது, முன்பு நீரேறாத கரம்பை வயல்களில் கமர்வாய் நீர் நிறைய வென்றவா” றென்பர் பழையவுரைகாரர். வேறே பொருவா ரின்மையின் குட்டுவன் நாட்டொடு போர் செய்தற்கெழுந்தது போலப் பேரியாற்று நீர் வருகிற தென்பார், “வாய் பரந்து மிகீஇயர்” என்றார். வாய் பரந்து மிகீஇயர் உருத்துக் கரையிழி தரும் நனந்தலைப் பேரியாற்று மலிர்நிறைச் செந்நீர் என மாறிக் கூட்டுக என்பர் பழையவுரைகாரர். வாய், இடம். யாற்று நீர் எவ்வாயும் பரந்து மிகுதல் வேண்டிப் பெருகிற் றென்றவாறாம். பெருகி மிக்கு வரும் செம்புனல் பொருவது குறித்துவரும் மள்ளர்போல வருகிற தென்பார், “உவலை சூடி |