பக்கம் எண் :

173

எடுக்குமென்பது    செயப்படுவினைப் பொருளதெனினும்    அமையும்.
பழையவுரைகாரர்  “முத்தமொடு  வார்துகி  ரெடுக்கு  மென்றது,  கரை
நின்றோரில்  வளைநரலக் கேட்டார் அம் முத்தெடுக்க வென்றது வந்து
முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுக்கும் என்றவா”  றென்பர்.
குறிஞ்சி   முல்லைகளை   வன்பா  லென்றும்,  மருத  நெய்தல்களை
மென்பா  லென்றும்  வழங்குப  வாதலின்,  இந்  நெற்தற்   பகுதியை
“தண்கடற் படப்பை மென்பாலன” என்றார். இது நெய்தல் கூறிற்று.
  

9 - 13. காந்தளங்............வைப்பும்.   

உரை : காந்தளங் கண்ணிக் கொலை வில் வேட்டுவர் -   காந்தட்
பூவால்    தொடுக்கப்பட்ட    கண்ணியினையும்   கொலை   புரியும்
வில்லினையுமுடைய  வேட்டுவர்  கொணர்ந்த;  செங்கோட்டு ஆமான்
ஊனொடு - செவ்விய கொம்பினையுடைய ஆமாவின்  இறைச்சியுடனே;
காட்ட   மதனுடை   வேழத்து  வெண்கோடு  கொண்டு  காட்டிடத்து
வாழ்வனவாகிய  வலியுடைய களிற்றி யானையின் கோட்டைப் பெற்றுக்
கொண்டு; பிழி நொடை கொடுக்கும் அவற்றின் விலைக் கீடாக வடித்த
கள்ளைக்  கொடுக்கும்;  பொன்னுடை  நியமத்து - பொன்னையுடைய
கடைத்தெரு  வமைந்த;  குன்று  தலை  மணந்த புன்புல வைப்பும் -
குன்றுகள் நெருங்கியுள்ள புன்புலமாகிய நிலப்பகுதியிலுள்ள ஊர்களும்
எ - று.
  

இப் புன்புல வைப்புக் குறிஞ்சியைச் சார்ந்து கிடத்தலானும், பூக்கள்
வந்த நிலத்தின் பயத்த வாதலானும் “காந்தளங் கண்ணி” கூறப்பட்டது.
இனி,  குறவராதலின்,  அவர்க்கேற்ப  இதனைக்  கூறினாரெனினுமாம்.
வேட்டுவர்   தாம்   வேட்டமாடிய  ஆமானின்  ஊனும்  வேழத்தின்
வெண்கோடும்   கொணர்ந்தமையின்   அவற்றைச்  சேரக்  கூறினார்.
வேட்டத்தின்  அருமைப்பாடு தோன்ற, “செங்கோட்டாமா” னென்றும்,
“மதனுடை   வேழ”   மென்றும்   சிறப்பித்தார்.  ஊனின்  சுவையும்
வெண்கோட்டின்       வன்மையும்        தோன்ற      இவ்வாறு
கூறினரென்பாருமுளர்.
  

இனி,     இப்  புன்புல  வைப்பின்  செல்வச்சிறப்புக்   கூறுவார்,
இங்கேயுள்ள   கடைத்தெருவைப்  “பொன்னுடை  நியமம்”  என்றார்,
இங்குள்ளார்  வேட்டுவர்க்கும்  பொன்னைத்  தந்து அவர் கொணரும்
ஊனும்  வேழ  வெண்கோடும்  பெறுதலே  யன்றி,  அவ் வேட்டுவர்
விரும்பும்   தேறலை  விலைப்பொருளாகத்  தருகின்றன   ரென்றற்கு,
“பொன்னுடை   நியமத்துப்   பிழிநொடை   கொடுக்கும்”   என்றார்.
“பொன்னுடை  நியம”  மென்றது, பொன்னைக் கொடுத்து வேண்டுவன
பெறுந்   திறம்  சுட்டி  நிற்கிறது;  உயிர்க்கொலை  புரியும் வேட்டுவ
ராதலின்,  பெறுதற்கரிய  பொன்னுடைய நியமம் புக்கும்  பொன்னைப்
பெறாது   வடித்த  கள்ளினையே  விரும்புவாராயினர்  என  அவரது
செயற்புன்மையை    யுணர்த்தியவாறாகக்    கோடலுமொன்று.   இது
முல்லையும்  குறிஞ்சியும்  சார்ந்த புன்புல வைப்பின் இயல்பு கூறிற்று.
புன்புல வைப்பில் வாழ்வார் வினை அவ் வைப்பின்மே னின்றது.