நீர்ப்பெருக்கின் வேகத்தால் ஆழமாக அறுக்கப்பட்ட இடங்களில் அப் பெருக்கைத் தடுத்து அணையிடுவார் வைக்கோற் புரிகளைக்கொண்டு மணற்கோட்டை யமைத்து அணையாக நிறுத்துப வாதலின், அவற்றைப் “பல சூழ் பதப்பர்” என்றார். பழையவுரைகாரரும், “பல சூழ் பதப்ப ரென்றது, பல புரியாலும் சூழப்பட்ட மணற்கோட்டை யென்றவா” றென்பர். இக் கோட்டையைக் கரிசை யென்றலும் வழக்கு. இம் மணற் கரிசைகளையும் இச் செம்புனல் கரைத் தொழித்தலின் மக்கட் கூட்டம் பேராரவாரத்துடன் மிக உயரமும் திண்மையும் அமைந்த அணைசெய்தமைத்து நீரைத் தடுத்து வென்றி கண்ட இன்பத்தால் அதனை மேலும் விரும்பிப் பலராய்க் கூடி அணையை மிதித்து வன்மை செய்து மகிழும் நலம் இனிது விளங்க, “சிறைகொள் பூசலிற் புகன்ற ஆயம்” என்றார். பெரும்படை திரண்டு வரும் பகைவர் தானைப் பெருக்கை எதிரூன்றி நின்று தடுத்துப் பற்றிச் சி்றை செய்து வென்றி பெற்று மகிழும் தானை வீரர் கூட்டம் மேலும் அச் செயலையே விரும்புதல் போல, நீர்ப்பெருக்கைச் சிறை செய்யும் மக்கட் கூட்டத்தைச் சிறப்பித்துக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்குப் புகன்ற வாயம் என்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், “புகன்ற ஆய மென்றது, முன்பு மணலணைக்கு நில்லாத பெருவெள்ளத்தினை அணைசெய்து முடித்த விருப்பத்தையுடைய ஆயமென்றவா” றென்றும், “இச் சிறப்புப்பற்றி இதற்குப் புகன்ற வாயமென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். வெண்டலைச் செம்புனலை அணை நிறுவிச் சிறை செய்து மகிழ்ந்த மக்கட் கூட்டம், நாட்டின் மூதூர்க்கண் நிகழும் திருவிழாவுக்குச் சென்று அதனைக் கண்டு திரும்புங்கால், மூதூர்க் காட்சியும் திருவிழாச் சிறப்பும் பேசிக்கொண்டு ஆரவாரத்தோடு பெயர்தலின், அதனையும் இதனோடியைத்து, “மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்” என்றார். மூதூர் என்பது பெரிய ஊர்; வைப்பு, சீறூர்கள். சீறூரவர் பேரூர்களில் நிகழும் விழாக் காணச் செல்வது மரபு. 22 - 25. ஏன லுழவர்........................வைப்பும். உரை : ஏனல் உழவர் - தினைக் கொல்லையை யுழுது பயிர் செய்யும் குன்றவர்; வரகு மீதிட்ட - வரகினது வைக்கோலை மேலே வேயப்பட்ட; கான்மிகு குளவிய அன்பு சேர் இருக்கை - மணமிக்க காட்டு மல்லிகை வளரும் அன்பு பொருந்திய மனைகளில்; மென்றினை நுவணை முறை முறை பகுக்கும் - மெல்லிய தினைமாவை வரும் விருந்தினர்க்கு முறை முறையாக அளித்துண்ணும்; புன்புலம் தழீஇயபுறவணிவைப்பும் - புன்செய் நிலங்களைத் தழுவிக் கிடக்கும் முல்லைநிலத்தை யணித்தாகவுடைய குறிஞ்சிப் பகுதியும் எ - று. மருத நிலத் துழவர்க்கு நெல்போலக் குறிஞ்சி நிலத்தவர்க்குத் தினையே சிறந்த தாகலின், அவர்களை “ஏன லுழவர்” என்றும், அவர் இருக்கும் வீடுகட்கு வரகின் வைக்கோலைக் கூரையாக வேய்வதும், மனைகளில் காட்டு மல்லிகை வளர்ப்பதும் இயல்பாதலின், “வரகு மீதிட்ட கான்மிகு குளவிய இருக்கை” யென்றும் கூறினார். கான், மணம். வில்லும் அம்பும் கொண்டு |