விலங்குகளை வேட்டையாடும் வன்கண்மை யுடையராயினும், குன்றவருடைய மனைகளில் அன்பும் அறமும் குன்றாது பொருந்தியிருக்கும் திறத்தை, “அன்புசேர் இருக்கை” யென்றார். இனி, இதனை வன்புசேர் இருக்கை யென்று கொள்ளின், குன்றில் வாழும் விலங்குகளாலும் பிறவற்றாலும் சிதைவுறாத வன்மை பொருந்திய இருக்கை யென்று கொள்க. தினை நுவணை - தினைமா. இது தன்னை யுண்டாரை வேறெதுவும் உண்ண விரும்பாதவாறு பண்ணும் சுவையும், கருப்புக் கட்டியைப் பொடிசெய்து கொழித்தெடுத்த நுண்ணிய பூழிபோலும் தோற்றமும் உடைய தென்பார், “விசையங் கொழித்த பூழி யன்ன, உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை” (மலைபடு. 444-5) என்று சான்றோர் கூறுதல் காண்க. என லுழவர் தம் அன்பு சேர் இருக்கைக் கண்ணிருந்து ஆற்றும் மனையறம் கூறுவார், வரும் விருந்தினர்க்கு அவர் தகுதி யறிந்து முறை பிறழாமல் தினைமாவைப் பகுத்துண்பர் என்றற்கு, “மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்” என்றார். புன்புலம், புன்செய், புறவு, முல்லைக்காடு. வைப்பென்றது, ஈண்டு வைப்புக்களையுடைய நிலப்பகுதி குறித்துநின்றது. இது குறிஞ்சியின் இயல்பு கூறிற்று. 26 - 29. பல்பூஞ்..............பிறவும். உரை : பல் பூஞ் செம்மற் காடு - பல்வகைப் பூக்களும் உதிர்ந்த வாடிக் கிடத்தலையுடைய காடுகள்; பயம் மாறி - பயன்படும் தன்மை திரிந்து; அரக்கத் தன்ன நுண்மணற் கோடு கொண்டு செவ்வரக்குப் போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மட்குன்றுகளைக் கொண்டு; ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் - ஒள்ளிய நுதலையுடைய மகளிர் காலிற் செருப்பணிந்து திரியும்; விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் - வானுற வோங்கிய மரங்கள் செறிந்த காடும் காடு சார்ந்த பகுதியும் எ - று. காடு பயமாறி, அரக்கத் தன்ன கோடு கொண்டு, மகளிர் திரியும் கடற்ற என்றும், விண்ணுயர்ந் தோங்கிய கடற்ற என்றும் இயையும் முல்லைக் காடுகள் தழையும் பூவும் உதிர்ந்து வெறுநிலமே தோன்ற நிற்கும் காட்சியை, “காடு பய மாறி” யென்றார். தழை முதலியன வின்றி நிற்கும் கோடும் அரக்குப்போற் சிவந்து நுண்மணல் பரந்து தோன்றுதலின், “அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு” என்றும் அந் நிலத்தே இயங்கும் மகளிர் காலிற் செருப்பணிந்து இருப்பதை இன்றும் காணலா மாதலின், “மகளிர் கழலொடு மறுகும்” என்றும் கூறினார். கழல், ஈண்டுச் செருப்பு. “கழலிற் செந்தாமரையடிகள் புல்லி” (சீவக. 1648) என்புழிக் கழல் என்றதற்கு, நச்சினார்க்கினியர் செருப்பெனப் பொருள் கூறியிருப்பது காண்க. இனிக் கழலென்றது, கழற்சிக்காய் என்றும் கூறுப. இனிப் பழையவுரைகாரர், மணற்கோடு கொண்டென்றது, மணற்கோட்டைக் கழலாடுதற் கிடமாகக்கொண் டென்றவாறென்றும், இனிக் கழலென்றதனைக் கழலை யுடைய தலைமகன் காலாக்கி அக்காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போ மென்பாரு முளரென்றும் கூறுவர். விண்ணுயர்ந் தோங்கிய கடறென்றது, வானளாவ வுயர்ந்த மரங்கள் செறிந்த காட்டை |