இதுவும் அது. பெயர் : கழையமல் கழனி. 1 - 9. மாண்டனை..........கொற்றவ. உரை : போர் மிகு குருசில் நீ - போரில் வெற்றியால் மேம்பட்ட குரிசிலாகிய நீ; பல மாண்டனை - முன் பாட்டிற் கூறியவாற்றால் பல வகையாலும் மாட்சிமைப்பட்டனை; மாதிரம் விளக்கும் சால்பும் - திசை முழுதும் சென்று விளங்கித் தோன்றும் சால்புடைமையும்; செம்மையும் - நடுவு நிலைமையும்; முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற - முத்துண்டான மருப்பினையுடைய இளங் களிறுகள் பிளிறுமாறு; மிக்கு எழு கடுந்தார் - போர்வேட்கை மிக்கெழுகின்ற கடிய தூசிப்படையானது; துய்த்தலைச் சென்று - பகைவர் நாட்டின் எல்லை முடியச்சென்று; துப்புத் துவர் போக - வலிமை தான் தன்னெல்லை காறும் மிக்கெழப் பொருது; பெருங்கிளை யுவப்ப - பாணர் முதலிய இரவலராகிய பெரிய கிளைஞருக்கு உவப்புண்டாமாறு; ஈத்தான்று ஆனா இடனுடை வளனும் - பகைப்புலத்தே பெற்ற அரிய பொருள்களை யீத்துப் பெற்றவர்தாம் இனி வேண்டா அமையுமென அமைந்தொழியவும் எஞ்சியவற்றால் தன்னிட முற்றும் நிரம்பவுடைய பெருஞ் செல்வமும்; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் - தளர்ந்த குடியிலுள்ளாரை அத் தளர்ச்சி நீக்கி முன்னைய நிலைக்கண்ணே யுயர்த்தி நிறுத்திய வெற்றிச் செய்தியுமாகிய; எல்லாம் எண்ணின் எல்லாவற்றையும் விடாது எண்ணிப் பார்க்குமிடத்து; இடு கழங்கு தபுந - எண்ணுதற்குப் பெய்யும் கழங்கு முடிவறிந்து பயன் கூறமாட்டாது ஒழிதற்குக் காரணமானவனே; அடு போர்க் கொற்றவ - செய்கின்ற போர்களில் வெற்றியே பெறுவோனே; கொன் ஒன்று மருண்டனென் - நின் குணங்களுள் மிக்குத் தோன்றுவ தொன்றனைக் கண்டு அறிவு மருண்டேன், காண் எ - று.. மேலே கூறிய மாட்சிகள் பலவற்றையும் தொகுத்துப் பெயர்த்துமுரைத்தார், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் குணஞ் செயல்கள் பலவும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கு நிற்கும் அவனது பொறைக் குணத்தைச் சிறப்பிக்கும் கருத்தின ராதலின். சால்பு, நற்குணங்களால் நிறைதல் நாற்றிசையினும் உறையும் வேந்தர்களுள், குணநிறைவாலும் செங்கோன்மையாலும் இச் சேரமானின் மிக்காரும் ஒப்பாரும் இன்மையின், “மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்” எடுத் தோதினார். சால்பின் கண் செம்மையும் அடங்குமாயினும், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை யென்ற ஐந்தையுமே சிறப்பாகக் கொண் டிலங்குதலால், செம்மையை வேறு பிரித் தோதினார். இளமையும் சீரிய வன்மையுமுடைய களிற்று |