பக்கம் எண் :

193

இனிப் பழையவுரைகாரர், “முடமாகிய கழை யென இருபெயரொட்டு
:என்றும்,  “நெல்லின்  கழை, நெல்லினது கழை” யென்றும்   கூறுவர்.
முடச்சினை,    முடக்கொம்பு    என்றாற்   போல,   இது   பண்புத்
தொகையாமன்றி  இருபெயரொட்டாகாமை  யறிக.  அவர், “நெற்றாளை
அதன்  பருமையாலே  மூங்கிலோடு  ஒப்புமைபற்றிக்  கழை  யென்று
பெயர்  கொடுத்த  சிறப்பான்  இதற்குக்  கழையமல்  கழனி  யென்று
பெயராயிற்று” என்பர்.
  

இந்  நாட்டைச் சேரமான் அகப்படுத்துக் கொண்டதற்குக்  காரணம்
இது  வென்பார், “பிழையா வினையுள்” எனச் சிறப்பித்தார்.  வைத்தல்
நன்கு  மதித்தலாகலின்,  வையா  மாலையர் என்றது ஒரு  பொருளாக
மதிக்கக்கூடிய   தன்மை   யில்லாதவ   ரென்னும்   பொருட்டாயிற்று.
பழையவுரை,  “ஒன்றில்  வகைபடாத  இயல்பை  யுடையவர்”  என்று
கூறும்.  நன்மதிப்பும்  இசையுமுடையராயின்,  பகை  வேந்தர்,   நின்
சால்பும்   செம்மையும்   பிற  மாண்புகளும்  அறிந்த   மாத்திரையே
பகைமை  நீங்கி  நகைவராய்க்  கூடி  மகிழ்வராகலின்  நின் பகைவர்
வையா   மாலையரும்  வசையுநரு  மாயினர்  என்கின்றார்;  எனவே,
வசையுநராவர்    நாளும்    பிற    வேந்தரை    வசை   கூறுதலே
தொழிலாகவுடையரென்பது பெறப்படும். வசையுநர் ;  பெயர்த்திரிசொல்.
கறுத்தல்,  சேரமான்  வினையாதலின், கறுத்த வென்னும்  பெயரெச்சம
செயப்பாட்டு   வினைப்பொருட்டாயிற்று.   இனி,   பழையவுரைகாரர்
வசையுநர்க் கறுத்த பகைவர்  எனக்கொண்டு, “தங்கள் பகைவரொடு
செற்றங்  கொண்டாடாது  ஒழிந்திருக்க  வேண்டுமளவினும்  ஒழியாது
அவர்களை  அக் கடப்பாடன்றி வெகுண்டிருத்தலே தொழிலாகவுடைய
பகைய  ரென்றவா”  றென்றும், “இனி,  ககர  வொற்றின்றி வசையுநர்
கறுத்த என்பது  பாடமாயின், அதனை வினையெச்ச  வினைக்குறிப்பு
முற்றுத் திரிசொல்லாக்கி,  வசை  சொல்லுதலையுடையராய் வெகுண்ட
பகைவரென் றுரைப்பாருமுள” ரென்றும் கூறுவர்.
  

இதுகாறும்   கூறியது, போர்மிகு குருசில், நீ பல மாண்டனை; நின்
மாண்பே  யன்றிச்  சால்பும்  செம்மையும் ஈத்தான் றானா  விடனுடை
வளனும்,   துளங்கு  குடி  திருத்திய  வலம்படு  வென்றியும்  ஆகிய
எல்லாம்  எண்ணின்  இடு  கழங்கு  தபுந;  அடு  போர்க்  கொற்றவ,
கொன்னொன்று   மருண்டனென்;   தன்   கொடு  மிடல்  துமிதலால்
நெடுமிடலஞ்சி  யென்பான்  சாய,  யானையொடு  அவன்  புலங்கெட
இறுத்து,   பிழையா  விளையுட்டாகிய  நாடு  அகப்படுத்து,  பகைவர்
தேஎத்தாயினும்  சினவாயாயினை;  இவ்வாறு  நீ  சினவா  யாகுதலால்
உண்டாகும்   இறும்பூது   பெரிது  என்பதாம்.   இக்   கருத்தையே
பழையவுரைகாரர்,     “குருசில்,     நீ     பல       குணங்களும்
மாட்சிமைப்பட்டனை;  அப்  பல  குணங்களும்  எண்ணப்புகின், இடு
கழங்கு  தபும்  எல்லையவாயிருக்கும்;  கொற்றவ,  பல  குணத்தினும்
ஒன்றைக்   கொன்னே   யான்   வியந்தேன்;  அப்  பலவற்றுள்ளும்
வியப்பான   குணம்   யாதெனின்,  பகைவர்  செய்த  குற்றத்திற்குத்
தண்டமாக     அவர்     நாட்டை         அகப்படுத்திக்கொண்டு
வையாமாலையராகிய வசையுநர்க் கறுத்த அப் பகைவரிடத்தாயினும் நீ
சினவா  தொழிகின்ற  பொறை எமக்குப் பெரிதும் வியப்பாகா நின்றது
என வினை முடிவு செய்க” என்பர்.
  

இதனாற்     சொல்லியது,  அவற்குள்ள  பல    குணங்களையும்
உடனெண்ணிப்  புகழ்ந்து  அவற்றுட் பொறை யுடைமையை மிகுத்துப்
புகழ்ந்தவாறாயிற்று.