வேண்டியவழி முன்னே பறை யறைந்து செல்பவாதலாலும், உலாவரல் முதலிய செலவின் கண் கடுமை வேண்டாமையின் இருமருங்கும் கிடந்து இரட்டுமாறு நால விடுவ ராதலாலும் இவ்வாறு, “அணைத்த” எனக் கூறினார் என்றுணர்க. அணைத்தல், பிணித்தல். பணை, உரல் போல்வதொரு முரசு வகை; ஆனுருபு ஒடுவின் பொருட்டு. யானையைக் கடிமரத்தோடு பிணித்தல் பண்டையோர் மரபு; “ஒளிறுமுகத் தேந்திய வீங்குதொடி மருப்பிற், களிறு கடி மரஞ் சேரா” (புறம். 336) என்று பிறரும் கூறுதல் காண்க. நீர, பெயரெச்சக் குறிப்பு; “சினைய சிறுமீன்” (ஐங். 1) என்றாற் போல. கடிமரத்திற் களிறு பிணித்தலும் நீர்த்துறையைச் சேறாகக் கலக்கி யழித்தலும் பகை வேந்தர் செயலாகும். மூழ்த்தல், மொய்த்து வளைத்தல்; “முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர் மூசி” (பெருங். 1, 56; 49) எனப் பிறரும் இதனை வழங்குதல் காண்க. சென்றிறுத்தலை விரைந்து செய்யுந் திட்பமுடைமை தோன்ற, இறுத்த வென இறந்த காலத்தாற் கூறினார். ஈண்டுக் கூறியன தூசிப்படையின் செயல்களாதலின், வியன் தானை யென்றது தூசிப்படையாயிற்று. பழையவுரைகாரரும், “வியன்றானை யென்றது, பகைவர் நாட்டெல்லையில் முற்பாடு சென்று விட்ட தூசிப் பெரும் படையை” என்றே கூறுவர். நோன்றாட் களிறணைத்து, துறை கலங்க மூழ்த் திறுத்த வியன்றானையென வியையும். 6 - 12. புலங்கெட................நின்னே. உரை : புலங் கெட நெரிதரும் - தங்கிய புலன்கள் விளைபயன் கெட்டழியுமாறு செறிந்து தங்கும்; வரம்பில் வெள்ளம் கரையில்லாத கடல் போன்றதும்; வாள் மதிலாக - வாட்படையே மதிலாகவும்; வேல்மிளை உயர்த்து - வேற்படையே காவற்காடாகவும் நிற்ப; வில் விசை உமிழ்ந்த அம்பு வைம்முள் - வில்லினின்று விசையுறத் தொடுக்கப்படும் அம்புகள் கூரிய முள்வேலியாகவும்; வளைஇய செவ்வாய் எஃகம் அகழின் - தானையைச் சூழநின்ற சிவந்த வாயையுடைய பிற படைக் கருவிகள் அகழியாகவும்; உரறு முரசின் காரிடி யுருமின் - முழங்குகின்ற முரசங்கள் கார்காலத்து இடிக்கும் இடியேறாகவும்; வழங்கு கால் ஆர் எயில் - நடக்கின்ற காலாட்கள் வெல்லுதற்கரிய அரணாகவும் கொண்ட முழு முதலரணம் போன்றதுமாகிய நின் படை; கருதின் - பகைமேற் செல்லக் கருதினால்; போர் எதிர்வேந்தர் - அதன் போரை எதிரேற்றுப் பொரவரும் பகைவேந்தர்; நின் - நின்னையும் நின் படையையும்; ஒரூஉப - கண்டமாத்திரையே அஞ்சி யுளமழிந்து பொர நினையாது புறந்தந்து ஓடுவர் எ - று. தூசிப்படையை “வியன் றானையொடு” எனப் பிரித் தோதினாராகலின், வரம்பில் வெள்ள மென்றது, பின்னணிப் பெரும்படையாயிற்று. தானை சென்று பகைப்புலத்தே தங்குங்கால், அப் புலங்களின் விளை நலத்தை யெரியூட்டிக் கெடுத்தும், நீர் நிலைகளைக் கரையுடைத்துச் சிதைத்தும் அழிப்ப ராதலின், “புலங்கெட நெரி தரும்” என்றார். “கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப், பெரும்புனல் வாய்திறந்த பின்னும்” (பு. வெ. 56) என்று |