பிறரும் கூறுதல் காண்க. படையும் அரசற்கு அரணாகும் சிறப்புடையதாகலின், வாள், வேல், வில், எஃகம் முதலியவற்றை எயிற் குறுப்பாகிய மதிலும் மிளையும் வேலியும் அகழியுமாக உருவகம் செய்தார். “படை வெள்ளத்தை ஆரெயி லென்றது, அரசன் தனக்கு ஆரெயில் போல அரணாய் நிற்றலின் எனக் கொள்க; இனிக் கார் வழங்கா ரெயில் எனக் காற்றல்லது வழங்கா ஆரெயில் என்று பகைவர் மதிலாக்கி, அதனை வரம்பில் வெள்ளம் கொள்ளக் கருதினென் றுரைப்பாரு முளர்” என்பது பழையவுரை. வரம்பில் வெள்ளமென்றும் ஆரெயி லென்றும் நின்றன பின்னணிப் பெரும் படையையே சுட்டி நின்றன. கடல் கரையுடையதாகலின், அதனின் நீக்கற்கு “வரம்பில் வெள்ள” மென்றார். அதுபோல் அளக்கலாகாப் பெருமை யுடைமையும் உடன்தோன்ற நிற்றலின், இதனானே இப் பாட்டிற்குப் பெயரமைத்தனர். இனிப், பழையவுரைகாரர், “வரம்பில் வெள்ளமென்றது, அதனொடு கூடி நாட்டுள்ளுஞ் சென்றுவிடும் பேரணிப் பெரும்படையை; கரையையுடைய கடலை வரம்புடைய வெள்ள மென் றாக்கி, இதனை வரம்பில் வெள்ளமென்று கூறிய சிறப்பான் இதற்கு வரம்பில் வெள்ளமென்று பெயராயிற்று” என்பர். மேலும், அவர், “வெள்ளம் என்பதில் மகர வொற்றுக் கெடாமையான் இருபெயரொட்டுப் பண்புத் தொகையன்றி ஒருபொருளாக இருபெயர் நின்றதாகக் கொள்க” என வுரைப்பர். என்றது, வரம்பில் வெள்ளம் என்பதும், ஆரெயில் என்பதும் ஒரு பொருள் குறித்து வேறு பெயர்க் கிளவி என்றவாறாம். வரம்பில் வெள்ள மென்றது, தானையின் தொகை மிகுதியும் பெருமையும் குறித்துப் பொதுப்பட நிற்ப, ஆரெயி லுருவகம் அதன் உறுப்புக்கள் அரணாம் சிறப்பை விளக்கி நிற்கிறது. செயவெனச்சம் செய்தென நின்றது. பழையவுரையும், “உயர்த் தென்பதனை உயர்த்தவெனத் திரித்து, அதனை யெஃகம் வளைஇய வென்பதனோடு முடிக்க” என்று கூறும். போர் முனைக்குச் செல்லாது ஒழிந்திருக்கும் ஏனைக் குந்தம், தோமரம் முதலிய படைத்திரளைப் பொதுவாய்ச், “செவ்வா யெஃகம்” என்றொழிந்தார். இன், அல்வழிக்கண் வந்தன. பழையவுரைகாரர், “வாள் மதிலாக வென்று வைத்துப் பின்னை ஆரெயி லென்றது, வாண்மதிலைச் சூழ்தலையுடைய ஆராகிய எயிலினையெனக் கொள்க; ஈண்டு, ஆராவது காலாள் வழங்கிச் செல்கின்ற படையின் திரட்சி” என்றும், “இனி, வரம்பில் வெள்ளமானது வாள் மதிலாக வேல் மிளை யுயர்த்துக் கால் வழங்கு ஆரெயிலாதலைக் கருதினென்றலும் ஒன்று” என்றும் கூறுவர். இனி, “ஆரெயிலைப் பகைவரது படைநிலையாக்கி, அதனை நின் வரம்பில் வெள்ளமாகிய தானை கொள்ளக் கருதின் என்று இயைத் துரைப்பினுமாம்” என்பர். நின் னென்புழி, ஐயுருபு தொக்கது. இதுகாறும் கூறியது, கொடித்தே ரண்ணலே முன்னைய இறும்பூதினும் இது பெரிதாக உளது; யாங்ஙனமெனின், வியன் றானையொடு வரம்பில் வெள்ளம் போன்றதும் ஆரெயில் போன்றதுமாகிய நின் பின்னணிப் பெரும்படை மேற்சென்று பகைவர்பால் வென்றி கொள்ளக் கருதின்; போரெதிரும் பகைவேந்தர் கண்ட மாத்திரையே யூக்க மிழந்து அஞ்சி நடுங்கி நீங்கி யோடுகின்றன ராகலான் என்றவாறாம் பழையவுரைகாரர், “அண்ணல் இது பெரிதும் இறும்பூதாயிருந்தது; யாதெனின், வரம்பில் |