துறை : வாகை வண்ணமும் தூக்கும் அது. பெயர் : ஏவல் வியன்பணை. 3 - 8. துப்புத்துறை.....................முன்ப. உரை : வெப்புடைத் தும்பை - வெம்மையையுடைய தும்பை சூடிப பொரும் போரின்கண்; கறுத்த தெவ்வர் கடிமுனை யலற வெகுண் டெழுந்த பகைவர் அச்சம் பொருந்திய முனையிடத்தே கேட்டு உளங்கலங்கி யலறும்படி; எடுத்தெறிந்து இரங்கும் கடிப்பினை யோச்சி யறைதலால் முழக்கும்; ஏவல் வியன் பணை போர் வீரரை முன்னேறிச் செல்லுமாறு ஏவுதலைச் செய்யும் பெரிய முரசமானது ; உரும் என அதிர்பட்டு - இடிபோல அதிர்ந்து; முழங்கி - முழங்குதலைச் செய்ய; செரு மிக்கு-போர் வேட்கைமிக்குற்று; அடங்கார் ஆர் அரண்வாடச் செல்லும் - பகைவரது அரிய அரணழியுமாறு மேற் செல்லும்; காலன் அனைய - கூற்றுவனை யொத்த; துப்புத்துறை போகிய - போர்த்துறையெல்லாம் முற்றவும் கடைபோகிய; கடுஞ்சின முன்ப - மிக்க சினமும் வன்மையும் உடையோனே எ - று. தும்பை சூடிப் பொரும் போரைத் தும்பை யென்றும், போர் வீரரது வெம்மையைப் போர்மே லேற்றி, “வெப்புடைத் தும்பை” யென்றும் கூறினார். பகைமையுடைய ராயினும், சினம் மிக்குற்றவழி யல்லது போரின்கண் எதிரா ராதலின், “கறுத்த தெவ்வர்” என்றார். கறுப்பு, வெகுளி; “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்” (சொல். உரி. 76) என்ப கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் பெருமுழக்கமுண்டா மாதலால், “எடுத்தெறிந்திரங்கும்” என்றார். எறிந்தென்னும் செய்தெ னெச்சம் காரணப்பொருட்டு ; பழையவுரைகாரர், “எடுத் தெறிய வெனத் திரிக்க” என்பர். நெடுந்தொலைவிற் பரந்து பல்வகைப் படைகளின் இடையே நின்று பொரும் வீரர் செவிப்படுமாறு சென்றொலிக்கும் பெரு முரசு என்றற்கு, “வியன் பணை” யென்றும், அதனை முழக்கொலி செவியிற் கேட்கும் போர் மறவரை முன்னேறிச் சென்று பொருமாறு ஏவி யூக்கும் குறிப்பிற் றாதலால் “ஏவல் வியன் பணை” என்றும் சிறப்பித்தார். வேந்தன் பணிக்கும் ஏவலைத் தன் முழக்கத்தால் உணர்த்தும் பெருமையுடைமை தோன்றப் போர் முரசை “ஏவல் வியன்பணை” யெனச் சிறப்பித் துரைத்த இச் சிறப்பால் இப் பாட்டிற்கு ஏவல் வியன்பணை யெனப் பெயராயிற்று. பழைய வுரைகாரர், “ஏவல் வியன்பணை யென்றது, எடுத்த வினை முடிந்த தெனாது மேன்மேலும் படையைக் கடிமுனைக்கண் ஏவுதலையுடைய முரசு என்றவா” றென்றும், “இச் சிறப்பான் இதற்கு ஏவல் வியன்பணை யென்று பெயராயிற்று” என்றும் கூறுவர். இவ் வியன்பணையின் முழக்கிசையின் இயல்பு தெரித்தற்கு, “உருமென வதிர்பட்டு முழங்கி” யென்றார் கடிப்பினைக் கடிதோச்சி யெறிதலால் அதன்கண் அதிர்குர லெழுந்து முழங்குவது இடியேறு போல்கின்ற தென்பதாம். முழங்க |