ஊர்முக மென்றது போர்க்களத்தை. அடுத்தூர்ந் தடும் இடமாதலின், போர்க்களம் ஊர்முக மெனப்பட்டது. இனிப் பழையவுரைகாரரும், “போர் நிழற் புகன்ற சுற்ற மென்றது படைத்தலைவரை” யென்றும், “ஊர்முக மென்றது படை பொரும இடத்தை” யென்றும் கூறுவர். அந்தில் ; அசைநிலை ; “அந்தி லாங்க அசைநிலைக் கிளவியென், றாயிரண்டாகு மியற்கைத் தென்ப” (சொல். இடை. 19) என்பது தொல்காப்பியம். தானைப் பெருமையும் தமது சிறுமையும் தம்முடைய தலைவர் வலியின்மையும் தேர்ந்து ; இனித் தமக்குக் களைகணாதற்குச் சேரமானே தக்கோனெனக் கண்டு அவனைப் புகலடையும் கருத்தினராதலின், “களைநர் யாரினிப் பிறர் எனப் பேணி” யொழுகுகின்றார் என்றார். மன்னெயில் மறவர்க்குத் தலைமை தாங்கி, எதிரூன்றி நின்ற பகை வேந்தர் தம் வலியழிந்து அவரைக் கைவிட்டு நீங்கினமையின், “ஒன்னார் தேய” என்றார். செயவெனச்சம், காரணப்பொருட்டு. மன்னெயில் மறவர் ஒலியவிந் தடங்கே, அவரல்லாத தானைத் தலைவரும் வேந்தரும் வலிதேய்ந் தழிந்து அவரைக் கைவிட்டோடினமை பெறப்படுமாயினும், முடியுடைப் பெருவேந்தனாகிய இச் சேரன்முன், மறவர் அவிந்தொடுங்கின ரென்றல் சீரிதன்மையின், “ஒன்னார் தேய” வென்பது கூறப்படுவதாயிற்று. அதனால் ஊக்கமிழந்து வலியிழந்து எயிலிடத்தே யடங்கிக் கிடந்த மறவர், நார்முடிச் சேரலை வணங்கி, “பெரும, ஆடவர் போர்முகத் திருப்ப, தானை வயலிடத்து வந்த இறை கொண்டதாகலின், நீ நின் தானையுடன் ஊர்முகத்து இறாலியர்; இறைகொள்வையாயின், எமக்குக் களைகணாவார் பிறர் யாவருளர்” என்பாராய், “களைநர் யார் இனிப் பிறர்” என வேண்டுகின்றா ராயிற்று. இவ்வாறு வேண்டும் மறவர், போர் முகத்துத் தோன்றாது எயிலிடத்தே போர்க்குரிய ஆரவாரமின்றி யவிந்து கிடக்கின்றா ரென்பார், “மறவர் மன்னெயிலிடத்து ஒலியவிந்து அடங்க” என்றார். ஒலி யவியாதாயின், போர்வினை தொடர்ந்து அவர்தம் உயிர்க்குக் கேடு செய்யுமாதலால், “ஒலியவிந் தடங்” குவது இன்றியமையாதாயிற்று. ஒன்னாரென்றதற்கு மறவர்க்குத் தலைவராகிய பகை வேந்த ரென்னாது, பழையவுரைகாரர், “ஒன்னா ரென்றது, முன்சொன்ன மன்னெயில் மறவரல்லாத பகைவரை” யென்பர். மன்னெயில் என்றதனால், எயிற்புறத்தே போர் நிகழுமாறும், எயில் மட்டில் சிதையாது நிலைபெறுமாறும் பெறப்பட்டன. இக்கருத்தே தோன்றப் பழையவுரைகாரரும், “ஆடவர் போர்முகத் திறுப்ப, வயலிலே வந்து இறைகொண்டன்று தானை ; களைநர் யார் இனிப் பிறர் ; பெரும நின் தானை சுற்றமொடு ஊர் முகத்து இறாலியரெனச் சொல்லிப் பேணி என மாறிக் கூட்டுக” என்பர். 9 - 16. பூமலைந்துரைஇ ........... சேரல். உரை : பூ மலைந்து உரைஇ - போர்க்குரிய தும்பைப் பூவைச் சூடிச் சென்று ; வெண்தோடு நிரைஇய வேந்துடை அரும் சமம் கொன்று - வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலை யணிந்து சேரவரசுக் குரியோரெனப் போந்தெதிர்ந்த வேந்தருடைய எளிதில் வெல்லுதற்கரிய போரை யழித்து ; புறம் பெற்று அவ்வேந்தர் புறந்தந்தோடச் செய்து மன்பதை நிரப்பி அவராற் போக்கப்பெற்ற |