நன்மக்களை நாட்டிற் குடிபுகச் செய்து நிரப்பி ; வென்றி யாடிய தொடித்தோள் மீகை - வெற்றியாற் குரவையாடி மகிழ்ந்த தொடியணிந்த மேம்பட்ட கையினையும் ; எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து - பகையரச ரெழுவர் முடிப் பொன்னாற் செய்த ஆரமணிந்த திருமகள் விரும்பியுறையும் மார்பினையும் ; பொன்னங்கண்ணி - பொன்னாற் செய்த கண்ணியும் ; பொலந் தேர் நன்னன் - பொன்னாற் செய்த தேருமுடைய நன்னன் என்பானது ; சுடர்வீ வாகைக் கடி முதல் தடிந்த - ஒளிபொருந்திய பூவையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தற்கேதுவாகிய ; தார் மிகு மைந்தின் - தூசிப்படையோடே மிக்குச் செல்லும் - வலியினையும் ; நார்முடிச் சேரல் - நாராற் செய்யப்பட்ட முடியினையுமுடைய சேரமான் எ - று. சேரர் குடிக் குரிய ரல்லாதார் உரிமை யுடைய ரெனச் சொல்லிப் பனந்தோட்டுக் கண்ணியும் முடியு முடையரா யிருந்தமையின், களங்காய்க் கண்ணியும் நார்முடியும் அணிந்தெழுந்த இச் சேரமான், அவர்பால் தும்பை மலைந்து போர் தொடுத்த வரலாற்றை, “பூமலைந் துரைஇ” என்று குறிக்கின்றார். உரிமையிலராகவும் உடையரெனத் தோற்றுவித்தற் பொருட்டுப் பனந்தோட்டுக் கண்ணியுந் தாரும் நிரை நிரையாக அணிந்திருக்குமாறு தோன்ற, “வெண் தோடு நிரைஇய வேந்து” என்றார். “வெண்தோடு நிரைத்த” என்ற பாடம் இதற்குக் கரியாத லறிக. பனந்தோடு வெள்ளிதாகலின் வெண்தோ டெனப்பட்டது. “கொம்மைப் போந்தைக் குடுமி வேண்டோ” (குறுந். 281) டென்றும், “வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசிவெண் டோடு” (புறம். 100) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. “போந்தை வெண்டோடு” (பதிற். 51) என்றாற் போலத் தெரித்து மொழியாராயினார், இருதிறத்தார்க்கும் ஒத்த உரிமையுடைத் தாதலால், இனிப் பழையவுரைகாரர், வெண்டோடு நிரைஇய பூ மலைந்து என மாறிக் கூட்டுக” வென்பர். “பூமலைந் துரைஇ” யென்றும், “வெண்டோடு நிரைஇய” வென்றும் பிரித் தோதினமையின், அஃது ஆசிரியர் கருத்தன்மையுணர்க. வேந்தர் தாமே தம் மைந்து பொருளாக வந்து போர் தொடுத்தலின், “வேந்துடை யருஞ்சமம் என்றார்; அவரை யெதிரேற்றுச் சென்று பொருதலின், பூ வென்றது தும்பை யாயிற்று; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (புறத் . 15) என ஆசிரியர் தொல்காப்பியனார் தும்பையி னிலக்கணங் கூறுமாற்றா னறிக. வேந்தாதற் குரிய ரல்லாதாரை வேந்தென்றார். அவ்வுரிமையினை நிலை நாட்டவே பொருகின்றா ரென்பதனை வற்புறுத்தற்கு பெரும் படையுடன் வந்து பொருதமை தோன்ற, “அருஞ்சமம்” என்றும், மீள ஒருகாலும் போர் தொடுக்காதவாறு அழித்தமை தோன்ற, “கொன்று” என்றும், வேந்தர் முடியும் கண்ணியு மிழந்து ஓடி யெரழிந்தன ரென்றற்குப் “புறம் பெற்று” என்றும் கூறினார். அவர் வேந்தராயிருந்த காலத்து இச் சேரமான்பால் உரிமையுண்மை தெரிந்திருந்த நன்மக்களை நாட்டினின்றும் போக்கினராதலின், அவரனைவரையும் மீளக் கொணர்ந்து நிறுத்தி வேண்டுவன நல்கிச் செம்மை செய்தன னென்பார், “மன்பதை நிரப்பி” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “மன்பதை நிரப்பி யென்றது,தன் படையை யவ் வேந்தர் நாட்டுத் தன் |