பாணன் பொற்பூப் பெறுதலும் மரபு; இதனை, “வயவேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏருடைவிழுக் கழஞ்சிற், சீருடைய விழைபெற்றிசினே......... பாண்மக னும்மே, ஒள்ளழல் புரிந்த, வெள்ளி நாராற் பூப் பெற்றிசினே” (புறம். 11) என்றும்,“வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின், பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவனினக்கே” (புறம். 319) என்றும் வருவனவற்றா லறிக. இளையராவார், பாண் தொழிற்குரிய கல்வி நிரம்பக் கல்லாது ஏவின செய்தொழுகும் இளைஞர். இவர் வேந்தனது களம் பாடுதலால் கள் பெற்றன ரென்பார், “இளையர் இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து வியன்களம் வாழ்த்த” என்றார். இனிப்புண்ட கள்ளை யுண்டலால் எய்தும் களிப்பு மிகாமையின், பாடுவன பிழையுறாவாறு எளிய பாட்டுக்களைப் பாடுகின்றா ரென்றற்கு, “இன்களி வழாஅ மென்சொல்லமர்ந்து” என்றும், இளமையின் பயன் நகையு முவகையுமே யாதலின், “நெஞ்சுமலி யுவகைய” ரென்றும் கூறினார். இளமைக்கண் பயின்ற எளிய சொற்களாலாகிய பாட்டுக்களை, “மென் சொல்” என்றார். பெரும்படையுடையனாதலால், அது நின்று போரூடற்றும் களம், “வியன் களம்” எனப்பட்டது. தலைமை சான்ற பாணன் தாமரையும், விறலி இழைகளும் பெறுவ ரெனவே, இளையர் அவர்தம் தகுதிக்கேற்ப, உரியன பெற்றாரென வறிக. தலைவன் தாமரைபெறுதலை, “தலைவன் தாமரைமலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய” (மலைபடு. 569 - 70) என்பதனாலறிக. இது விறலியாற்றுப்படை யாதலின், விறலியரை முற்படக் கூறினார் ; அவர் பாடி யாடற் கேற்பக் குரலும் சீரும் புணர்த்தலின், பாணரை அவர் பின் கூறினார். “இழைபெற்ற பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே, எனவாங்கு, ஒள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே” (புற. 11) எனச் சான்றோர் கூறுதல் காண்க. காட்டிலே தோன்றிப் பரந்துயர்ந்து நின்று, நாட்டவர் இருந்து காண விளங்கும் தீயினை, “காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர் சுடர்” என்றார்; சுடரென்றது ஈண்டு ஆகுபெயராய்த் தீக் காயிற்று. காடுதலைக் கொண்ட சுடர், நாடுகாண் அவிர்சுடர் என இயையும். காட்டிற் பிறந்து பரந்து உயர்ந்து நின்று விளங்குந் தீ, நாட்டவர் தம்மிடத்தேயிருந்து காணுமாறு தன் விளங்குகின்ற சுடரால் காட்டி நிற்கும் சிறப்பினை “நாடுகாணவிர் சுடர்” எனச் சுருங்க வோதி விளக்கிய நலத்தினால், இப்பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவ தாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “நாடுகாணவிர்சுடரென்றது, நாடெல்லாம் நின்று காணும்படி நின் றெரிகின்ற விளங்கின சுடர் என்றவா” றென்றும், “இச் சிறப்பானே யிதற்கு நாடுகாணவிர்சுட ரெனப் பெயராயிற்” றென்றும் கூறுவர். நாடுகா ணவிர்சுடராகிய காட்டுத்தீப் போலும் சினம் என்றற்கு “அவிர் சுடர் அழல்” என்றார். அழல், இலக்கணையால் சினத்துக் காயிற்று. காட்டுத்தீ சுடர்விட் டவிர்வது போல, யானையின் சினத் தீ “ஒண்பொறி பிசிர” நிற்கு மெனக் கொள்க. ஈண்டுச் சினமின்றாக, பாகரது தோட்டி வழிநின்றியங்கும் யானை யெடுக்குந் துகள் ஒண்பொறியாய்ப் பிசிரநின்ற தென்பார், “தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று, ஒண்பொறி பிசிர” என்றார். தொடி, யானைக்கோட்டிற்கு வலிமிகுமாறு இடையே செறிக்கப்படும் பூண் ; நுனியிற் செருகப்படும் கிம்புரியன்று. தோட்டி நீவாதே தொடிசேர்பு நின்றதாயினும் ஒண்பொறி பிசிர |