பண், இசைச் சுருதி; பண்ணுதலுமாம். கண்ணறுத் தியற்றிய பெருவங்கியம் களிற்றினது கைபோலும் வடிவை யுடையதாதல்பற்றி, களிற்றுயிர்த் தூம்பு என்றும் வழங்கும். “கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்” (மலைபடு. 6) என்றும், “கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின்” (புறம். 152) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. தகைத்த காவில் என மாறுக. தூம்பொடு சுருக்கி ஒருபக்கத்தே தகைத்த காவடியின் மறுபக்கத்தே கட்டிய கலப் பையினையுடையர் என இயைக்க. கலங்களைப் பெய்த பையைக் கலப் பை யென்றார். பிறவும் என்றதனால், எல்லரி, ஆகுளி முதலியனவும் கொள்க. துறை கூடு கலப்பையர் என்றதற்குக் காவடியின் மறுதலைத் துறை சமமாய் நிற்குமாறு எடை கூடிய கலப்பையர் எனினுமாம். “தலைப்புணர்த்தசைத்த பஃறொகைக் கலப்பையார்” (அகம். 301) என்று பிறரும் கூறுதல் காண்க. ஈண்டுத் துறை கூடுதல் இசைக்கலங்கட்குக் கொள்ளப்பட்டிருத்தலை யறிக. பாடற்றுறை,“வலிவு மெலிவு சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப் பாடும் இருபத்தொரு பாடற்றுறை” யென்ப. “மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பி” (புறம். 152) என்று சான்றோர் கூறுதல் காண்க. காடுகளின் வழியே செல்லுமிடத்துக் கள்வராலும் விலங்குகளாலும் பிற தெய்வங்களாலும் தீங்கு வாராது காத்தற்குக் கடவுளைப் பாடிப் பரவுவது இப் பாணர் முதலாயினார்க்கு இயல்பாதலால், “கடவுட் பழிச்ச” வென்றார்; “இலையின் மராத்த வெவ்வந் தாங்கி, வலைவலந்தன்ன மென்னிழல் மருங்கின், காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை” (பொருந. 50 - 3) என்று பிற சான்றோரும் கூறுவது காண்க. மதுரை நோக்கிச் செல்லலுற்ற கோவலன் கண்ணகியென்ற இருவருடன் வந்த கவுந்தியடிகளும் துணையாகப் புறப்பட்டுச் சென்றவிடத்து, “மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாகெனப் பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்” (சிலப். 10 : 100-1) என்று அடிகள் கூறுமாற்றானும் இவ் வழக்கமுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், துறை கூடு கலப்பை யென்றற்கு “ஆடற்றுறைக்கு வேண்டுவன வெல்லாம் கூடின முட்டு” என்பர். எனவே, இப் பாட்டுக் கூத்தர் தலைவன் கூறும் கூற்றென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். அதுவும் பொருந்துமாறு, “தூம்பும் குழலும் தட்டையும் எல்லரியும் பதலையும் பிறவும், “கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப, நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்” (மலைபடு . 6 - 13) என வரும் கூத்தராற்றுப்படையால் அறிக. 7 - 13. மறப்புலிக்................பிளிறும். உரை : வயக் களிறு - வலிமிக்க களிற்றியானை ; வரை சேர்பு எழுந்த சுடர்வீ வேங்கை - மலைப்பக்கத்தே சேர வளர்ந்து நின்ற ஒளி பொருந்திய பூக்களையுடைய வேங்கை மரத்தை ; மறப்புலிக் குழூஉக் குரல் செத்து - மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமாகக் கருதிச் சினங்கொண்டு ; பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து - பூக்கள் பொருந்திய பெரிய வேங்கைக் கிளையை வளைத்து ஈர்த்துப் பிளந்து ; தன் மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி - தனது பெரிய கரிய தலையில் |