பக்கம் எண் :

233

14 - 16. மழைபெயல் .......... காண்குவந்திசினே.  

உரை : மழைபெயல் மாறிய - மழைபெய்தல் நீங்கினதால் ;  கழை
திரங்கு  அத்தம்  -  மூங்கில்கள் பசையற் றுலர்ந்து போன வழிகள் ;
ஒன்று  இரண்டு அல பல கழிந்து - ஒன்று இரண்டன்றிப் பலவற்றைக்
கடந்து  ;  திண்  தேர்  -  திண்ணிய  தேர்களையுடைய ; வசையில்
நெடுந்தகை  -  குற்றமில்லாத  நெடுந்தகையாகிய  நின்னை ; காண்கு
வந்திசின் - காண்டற்கு வந்தேன் எ - று.
  

மழையின்மையால்     மூங்கில்கள்  பசையற்றுலர்ந்தவழி  அவை
காற்றால்  தம்மில்  இழைந்து  தீப்பற்றி யெரிவதால், வழிகள் செல்லற்
கரியவாதல்  பற்றி,  அருவழிகளை  இவ்வாறு  கூறினார். “கழைகாய்ந்
துலறிய  வறங்கூர்  நீளிடை”  (புறம்.  370)  என்று  பிறரும் கூறுதல்
காண்க.   வந்திசின்,   இதன்   தன்மைக்கண்   வந்தது   ;   இஃது
“ஏனையிடத்தொடுந்    தகுநிலை   யுடைய   வென்மனார்   புலவர்”
என்பதனா  லமைந்தது. “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற்.
61)  எனப்பிறரும்  தன்மைக்கண்  வழங்குதல் காண்க. நெடுந்தகையை
விளியாக்கினுமமையும்.
  

17 - 27. தாவல்............தாளே.  

உரை : வஞ்சினம் தாவாது முடித்த ஒன்று மொழி மறவர் - தாம்
கூறிய   வஞ்சினம்  தப்பாது  முடித்த  வாய்மையினையுடைய   வீரர்;
முரசுடைப்  பெருஞ்  சமத்து  -  முரசு  முழங்குதலையுடைய பெரிய
போரின்கண்;  அரசுபடக்  கடந்து  - எதிர்த்த வேந்தர் பட்டழியுமாறு
வஞ்சியாது பொருது; வெவ்வர் ஓச்சம் பெருக நட்பரசருடைய ஆக்கம்
பெருகவும் ; தெவ்வர் இருந்தலை பகையரசருடைய பெரிய தலைகளை
; உலக்கை எறி மிளகின் இடித்து - உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு
போலத்  தாம்  ஏந்திய  தோமரத்தால்  இடித்து  அழிக்கவும்; வைகு
ஆர்ப்பு  எழுந்த மைபடு பரப்பின் - இடையறாத முழக்க முண்டாகிய
கரிய   நிறத்தையுடைய   கடல்போல;   எடுத்தேறு  ஏய  கடிப்புடை
வியன்கண்    -    எடுத்தெறிதலைத்   தெரிவிக்கும்   குறுந்தடியால்
முழக்கப்படுகின்ற  அகன்ற கண்ணையுடைய முரசு; வலம்படு சீர்த்தி -
வெற்றியாலுண்டாகிய மிக்க புகழோடு ;ஒருங்குடன் இயைந்து ஒருங்கே
கூடி  முழங்க;  வால்  உளைக்கடும்  பரிப்  புரவி  யூர்ந்த வெள்ளிய
தலையாட்ட  மணிந்த விரைந்த செலவினையுடைய குதிரையை யூர்ந்த
நின்னுடைய  ;  படும்  திரைப்  பனிக்  கடல்  கால்  உளைக்  கடும்
பிசிருடைய  உழந்த  நின்  தாள்  -  ஒலிக்கின்ற அலைகளையுடைய
குளிர்ந்த கடலிற் சென்று அவ் வலைகள் காற்றால் உளைந்து சிறு சிறு
கடிய  திவலைகளாக  உடையுமாறு  போருடற்றிய  தாள்கள்;  தாவல்
உய்யுமோ  -  வருந்துதலினின்றும் நீங்குமோ, (வருந்தா  தொழியுமோ)
சொல்வாயாக எ - று.