இளங்கோ வேண்மாளென் றாராகலின், நன்னுத லென்றதற்கு இவ்வாறு கூறப்பட்டது ; “இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி” (சிலப். 25:5) என வருதல் காண்க. அன்னோரென்றது அவ்வியல்பினை யுடைய வீரச் சான்றோர் என்னும் சுட்டு மாத்திரையாய் நின்றது. 9 - 15. மைந்துடை...........எண்ணின் உரை : மைந்துடை நல்லமர் கடந்து - பகைவரது வலியுடைந்து கெடுதற் கேதுவாகிய நல்ல போரை வஞ்சியாது எதிர்நின்று செய்து; வலம் தரீஇ - வெற்றியைத் தந்து ; இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி - இஞ்சியும் நறிய பூவும் விரவத் தொடுத்த பசிய மாலை யணிந்து; புறத்து சாந்து எறிந்த தசும்பு - புறத்தே சந்தனம் பூசப்பெற்ற கட்குடங்கள் ; துளங்கு இருக்கை அசைகின்ற இருக்கைகளில் வைத்து ; தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் அவற்றில் நிறைத்த தீவிய சுவை நிறைந்த நீலமணி போலும் கள்ளினை ; ஓம்பா ஈகையின் - தனக்கெனச் சிறிதும் கருதாது ஈயும் இயல்பினால் ; வண்மகிழ் சுரந்து - மிக்க மகிழ்ச்சியினை வீரர்க்கும் போர்க்களம் பாடும் பொருநர் பாணர் முதலியோர்க்கும் அளித்து; கொடியர் பெருங்கிளை வாழ - கூத்தரது பெரிய சுற்றம் உவக்கும் படியாக; பொழிந்தவை - வழங்கப்பட்டனவாகிய, ஆடு இயல் உளையவிர் கலிமா - அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் குதிரைகளை; எண்ணின் எண்ணலுற்றால் எ - று. வலம் தரீஇ, மகிழ் சுரந்து, பொழிந்தவையாகிய கலிமா எண்ணின் என இயைக்க. மைந்து, வன்மை. தம்மோ டொத்த வன்மையும் படையும் ஆற்றலும் உடையாரொடு செய்யும் போரே அவரவரும் தம் புகழை நிறுத்தற்குரிய நலமுடைமையின் “நல்லமர்” என்றார். மைந்து, ஈண்டு பகைவர்மேல் நின்றது. மைந்துடை அமர் என்றது, “மதனுடை நோன்றா” (முருகு. 4) ளென்புழிப்போல நின்றது. போருடற்றும் சான்றோர்க்கு மெய்ம்மறையாய் நின்று பொருது வெற்றி பெற்றானாகலின், “வலம்தரீ இ” என்றார். பகைவரொடு பொருமிடத்து நடு நிற்கும் வெற்றியினைப் பகைவர்க்கன்றித் தமக்கேயுரித்தாமாறு பொருது கோடலின் “தரீஇ” யென்றாரென்றுமாம். சேறு, சுவை ; “தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்” (மதுரை. 400) என்று பிறரும் கூறுதல் காண்க. கட்குடத்தின் கழுத்தில் இஞ்சியும் நறிய பூவும் கலந்து தொடுத்த மாலையைக் கட்டி, புறத்தே சந்தனத்தைப் பூசி, குடம் அசையுமிடத்து அதற்கேற்ப இடந் தந்து நிற்கும் இருக்கையில் வைத்து, கள்ளை நிரப்பி, உண்பாரை நிரையாக அமர்வித்து வழங்குப. கள்ளுண்பார் களிப்பினை மாற்ற இஞ்சியைத் தின்று பூவின் மணம் தேர்வராதலால், “இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி” யென்றார். புறத்தே சாந்தெறிதலும் நறுமணங் குறித்தேயாகும். பழையவுரைகாரரும், “மது நுகர்வுழி இடையிடைக் கறித்து இன்புறுதற் பொருட்டு இஞ்சியும், மோந்து இன்புறுதற் பொருட்டுப் பூவுமாக |