முறை பெறா - எண்ணலுற்று அப் பிடிகளின் தொகை எண்ணிக்கைக் கடங்காமையால் எண்ணும் முறைமையைக் கைவிடும் ; கடவுள் நிலைய - கடவுளர் தங்கும் நிலைகளையுடைய ; கல் ஓங்கு நெடு வரை - கற்களாலுயர்ந்த நெடிய மலையாகிய ; இமயம் வடதிசை யெல்லையாக - இமயமலை வடக்கெல்லையாக ; தென்னம் குமரி யொடு - தெற்கெல்லை குமரியாக ; ஆயிடை - அவற்றின் இடையேயுள்ள நிலத்தின்கண் ; அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய - பகை அரசர் செய்யும் முரசு முழங்கும் பெரிய போர் கெடுதலால் ; ஆர்ப்பு எழ - வெற்றி யாரவார முண்டாக; சொல் பல நாட்டை - அவ்வரசரது புகழமைந்த நாட்டை யடைந்து ; தொல்கவின் அழித்த - அதன் புகழ்க்கேதுவாகிய பழைய நலத்தைக் கெடுத்தழித்த; போர் அடுதானை - போரில் நேர்வாரை அடுதலையே தொழிலாகவுடைய தானையினையும் ; பொலம் தார்க் குட்டுவ -பொன் மாலையினையுமுடைய குட்டுவனே எ - று. மகளிர் தம் கூந்தலிடையே கவரிமானின் மயிரையும் வைத்து முடியிட்டுக் கொள்பவாதலின், “கவரி முச்சி” யென்றார். கார் விரி கூந்தல் என்றதற்குக் கரிதாய் விரிந்த கூந்தல் என்றுமாம். முச்சி, கொண்டை முடி. “துவர முடித்த துகளறு முச்சி” (முருகு. 1 - 26) என வருதல் காண்க. இம் மகளிர் தம் கரிய கூந்தலைச் சீவிக் கவரி மயிர் கலந்து கொண்டையிட்டுக்கொண்டு, செவ்விய அணிகளைப் பூண்டு, காட்டிடத்தே ஊசலாடி மகிழ்வ ரென்பது கருத்தாயிற்று. மேவல், விருப்பம். இனிப் பழையவுரைகாரர், “முச்சி, கொண்டை முடி” யென்றும், கவரி முச்சியென்றதற்குக் “கவரிபோலும் கூந்த லெனக் கூட்டுக” என்றும் கூறுவர். யானையின் கால் உரல் போறலின், “உரல்போற் பெருங்கா” லெனப்பட்டது. “உரற்கால் யானை” (குறுந். 232) என்று பிறரும் கூறுப. வெண்ணிறமும் மழமழப்பால் ஒளியுமுடைமையின், அவ் யானைகளின் மருப்பு, “இலங்குவாண் மருப்பு” எனச் சிறப்பிக்கப்பட்டது. வேறு காடுகளிலிருந்து புதியவாய் வந்து ஈண்டுள்ள களிறுகளால் விருந்தோம்பப்படுவது கண்டும், “விருந்தின் வீழ்பிடி” யென்றும், களிறுகளால் காதலிக்கப்படுவது தோன்ற “வீழ்பிடி” யென்றும் கூறினார். இவ் யானைக் கூட்டத்தைக் கண்ட மகளிர், நடையால் தம்மை யொத்திருக்கும் இயைபுபற்றி, அப் பிடிகளையே வரைந்து எண்ணலுற்று, அவற்றின் தொகை எண்ணுக் கடங்கப் பெறாராயினர் என்பார், “அவற்றுள் விருந்தினன் வீழ்பிடியெண்ணு முறைபெறா” என்றார். புகுதரின் என்பது நாம் வாழும் காட்டகத்தே குறவர் கூட்டத்துக் கஞ்சிப் புகுதாமை பெற்றாம். குறிஞ்சி மகளிர் பிடிகளை யெண்ணலும், முல்லை மகளிர் மான்பிணை யெண்ணலும், பரதவர் மகளிர் கலமும் குருகு முதலாயின எண்ணலும் இயல்பு. இனிப் பழைய வுரைகாரர் “விருந்தின் வீழ்பிடி யென்றது, எண்ணுகின்ற மகளிர்க்கு விருந்தாகி அம் மகளிர் விரும்பிய பிடியென்றவாறு. இனிக் காட்டியானைக்கு விருந்தாகிய அவ் யானைகள் விரும்பும் |