பார்வைப் பிடி யென்பாரு முளர். பிடியினையே யெண்ணியது, தங்கள் நடையொப்புமை பற்றி யென்க. மகளிரென்னும் எழுவாய் பெறா என்னும் பயனிலை கொண்டது. பிடியது எண்ணென்க. எண்ணு முறையாவது சங்கு பற்பமுள்ளிட்ட தொகை” என்பர். கடவுள் நிலை, முனிவர்கள் இருந்து தவம் செய்யும் இடங்கள். கடவுள், தெய்வமுமாம். நிலைய வென்னும் குறிப்புப் பெயரெச்சம் வரையென்னும் பெயர் கொண்டது. கடவுள் நிலைய நெடுவரை, கல்லோங்கு நெடுவரை யென இயையும். குமரியொடு, ஒடு எண்ணுப் பொருட்டு. இனிப் பழையவுரைகாரர் “கல்லோங்கு நெடுவரை யாகிய இமயம் தென்னங் குமரியொடு வடதிசை யெல்லையாக என மாறிக் கூட்டுக”, என்றும், “எல்லையாக வென்னும் வினையெச்சத்திற்கு இவ்வாறு எல்லையான என ஒரு பெயரெச்சச் சொல் வருவித்து, அப் பெயரெச்சத்திற்கு ஆயிடை என்புழி அவ்வென்னும் வகரவீற்றுப் பன்மைச் சுட்டுப் பெயராக முடிவாக்குக” என்றும் கூறுவர். பெருஞ்சமம் ததைய வென்றது, பகையரசர் செய்த பெரிய போர்களைச் சிதைத்த செயல் குறித்து நின்றது ; “மாறா மைந்தர் மாறுநிலை தேய, முரைசுடைப் பெருஞ்சமம் ததைய” (பதிற். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சொல், புகழ். இனி இமயத்துக்கும் குமரிக்கு மிடையேயுள்ளனவென்று சொல்லப்பட்ட பல நாடுகளையும் “சொல் பல நாடு” என்றாரெனினுமாம். பழைய வுரைகாரரும், “சொல் பல நாடென்றது ஆயிடை அரசர் நாடெல்லாவற்றையும்” என்றே கூறுதல் காண்க. 12 - 18. இரும்பணை.................சொரிந்தாஅங். உரை : பெரும் பெயல் ஒளிப்ப - பெரிய மழை பெய்யாது பொய்த்தலால்; இரும்பணை திரங்க - காட்டிடத்தே மிக்க மூங்கில்கள் வாடியுலரவும் ; குன்று வறம் கூர - குன்றங்கள் பசும்புல்லும் இன்றிக் கெடவும்; சுடர்சினம் திகழ - ஞாயிற்றினது வெயில் வெப்பம் மிக்குத் தோன்றவும் ; அருவியற்ற பெருவறற் காலையும் - அருவிகள் நீரற்றொழிந்த பெரிய வற்கட காலத்தும்; அருஞ்செலல் பேராறு - கடத்தற்கரிய செலவினையுடைய பெரிய யாற்றிலே நீர்ப்பெருக்கானது ; இருங்கரை உடைத்து - பெரிய கரைகளையுடைத்துக்கொண்டு செல்லுமாறும்; கடிஏர் பூட்டுநர் கடுக்கைமலைய -புதிய ஏரைப்பூட்டும் உழவர் கொன்றைப் பூவைச் சூடிக்கொள்ளுமாறும் ; ஆர்கலி வானம் நிறைந்த முழக்கத்தையுடைய மழை மேகம் ; வரைவில் அதிர் சிலை முழங்கி பன்முறையும் மின்னியதிர்கின்ற இடி முழக்கத்தைச் செய்து ; பெயல் சிறந்து -பெய்தற்குமிக்கு ; தளி சொரிந்தாங்கு - மழை நீரைப் பொழிந்தது போல எ - று. பெரும் பெயல் பொய்த்தலால் குன்றுகளில் செறிந்திருக்கும் மூங்கில்கள் வாட, ஏனைப் பசும் புல்லும் தலை காண்பரிதாய்க் கெடுதலால் |